பள்ளிக்கரணையில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை
வேளச்சேரி:
பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காத்தாயி (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும்.
காத்தாயிக்கும் பள்ளிக்கரணை மூவேந்தர் தெருவில் மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகனுடன் வசித்து வந்த பாபுவுக்கும் (48) இடையே பழக்கம் ஏற்பட்டது. பாபுவின் சொந்த ஊரும் விழுப்புரம் என்பதால் காத்தாயியுடன் சிறுவயது முதலே அவர் பழகி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் காத்தாயி துணி துவைப்பதற்காக பாபு வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் காத்தாயியை கணவர் ஏழுமலை கண்டித்தார். மேலும் பாபு வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று காலை காத்தாயி திடீரென பாபு வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஏழுமலை மனைவியை தேடி பாபு வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி காத்தாயியும், பாபுவும் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் 2 பேரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.