செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியர் கைது

Published On 2019-06-20 03:47 GMT   |   Update On 2019-06-20 03:47 GMT
சேலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, தன்னிடம் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனமரத்துப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த கனகராஜ் என்பவருடைய மகன் பாலச்சந்திரன் (வயது23) உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார்.

அந்த பள்ளியில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி பிளஸ்-2 படித்துள்ளார். அந்த மாணவிக்கு பாலச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற அந்த மாணவி ஊருக்கு திரும்பி தற்போது கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.

நேற்று முன்தினம் அவரை தேடி பாலச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார். அந்த மாணவியை சந்தித்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது வீட்டில் கூறினார். இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து, பாலச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் மலர்விழி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News