செய்திகள்
நாமக்கல் அருகே காவலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
நாமக்கல் அருகே இரவு காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள எரையம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 77). இவர் முதலைப்பட்டியில் உள்ள தனியார் கார் பட்டறையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி இரவில் கார் பட்டறையில் தூங்கிக்கொண்டு இருந்த பழனியை மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனி சதீஷ்குமார் (30), பள்ளிபாளையம் சில்லாங்காடு ராம்பிரபு (32), ஐந்துபனை ஜெ.ஜெ.நகர் சசிக்குமார் (23) மற்றும் சத்திநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் என 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களில் 3 பேர் சேலம் சிறையிலும், 18 வயது வாலிபர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கார் பட்டறை உரிமையாளர் மாதேஸ்வரனின் மைத்துனர் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டதும், ஆள் மாறாட்டத்தில் இரவு காவலாளி பழனி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் சதீஷ்குமாரின் அண்ணனும், பால் வியாபாரியுமான ராதாகிருஷ்ணன் (35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் நல்லிபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி வரை ராதாகிருஷ்ணனை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ராதாகிருஷ்ணனும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.