செய்திகள்

காரமடை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-06-18 11:38 GMT   |   Update On 2019-06-18 11:38 GMT
காரமடை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரமடை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -புஜங்கனூர் சாலையில் தேக்கம் பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பவானி ஆறு அருகில் இருந்தும் அதில் இருந்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதில்லை. குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக கூறி இந்த சாலை மறியல் நடைபெற்றது.

மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் காரமடை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களை பொது மக்கள் முற்றுகையிட்டனர். தாங்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக குற்றம் சாட்டினர்.

பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி பிரச்சினைக்குரிய பகுதிகளில் உள்ள குறைகளை கலைந்து சீரான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக அப்பகுதில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News