செய்திகள்

கும்பகோணம் அருகே தனியாக வசித்து வந்த பெண் அடித்துக்கொலை

Published On 2019-06-18 11:31 GMT   |   Update On 2019-06-18 11:31 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியாக வசித்து வந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலகொற்கை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சந்தோஷ் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மகள், தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.

மேலகொற்கையில் உள்ள வீட்டில் வசந்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் ரத்தக் காயங்களுடன் வசந்தி பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. மேலும் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர்.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். வசந்தியின் தலை, முகம், கைகளில் காயங்கள் உள்ளது. எனவே இரவில் மர்ம கும்பல் , அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். வசந்திக்கு கொலைக்கு பணம்- கொடுக்கல் தகராறா? அல்லது வேறெதும் காரணமா? என்று பட்டீஸ்வரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் வசந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தனியாக வசித்து வந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News