செய்திகள்

தேவாரம் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலி

Published On 2019-06-17 18:17 GMT   |   Update On 2019-06-17 18:17 GMT
தேவாரம் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.
தேவாரம்:

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் எரசக்கநாயக்கனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த வீட்டின் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சிமெண்டு கலவையை மேற்பகுதிக்கு எந்திரத்தின் மூலம் கட்டிட தொழிலாளர்கள் கொண்டு சென்றனர்.

மாலையில் சுமார் 6 மணியளவில் பணி முடிந்ததும் கட்டிடத்தின் மேற்பகுதியில் எந்திரத்தில் இணைக்கப்பட்ட கம்பியை தொழிலாளிகள் கழற்றி கீழே போட்டதாக கூறப்படுகிறது. அந்த கம்பி கட்டிடத்தின் அருகே சென்ற மின்சார கம்பி மீது உரசியது. அப்போது கட்டிடத்தின் கீழ் பகுதியில் அந்த கம்பியை பிடித்த கட்டிட தொழிலாளர்கள் புலிக்குத்தியை சேர்ந்த மணியரசு (வயது 27), ரஞ்சித்குமார் (23) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் படுகாயமடைந்தனர்.

உடனே அங்கு இருந்த சக தொழிலாளிகள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணியரசு, ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News