செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி

Published On 2019-06-16 15:38 GMT   |   Update On 2019-06-16 15:38 GMT
உளுந்தூர்பேட்டை அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை:

சென்னை அய்யம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற பெரியண்ணன் (வயது 47). இவரது மனைவி கோமதி (45). இவர்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ஒரு காரில் பெரம்பலூர் மாவட்டம் துறையூருக்கு புறப்பட்டனர்.

அவர்களுடன் உறவினர் குமார் (47), அவரது மனைவி ரகிமா, மகள் ஐஸ்வர்யா (9) ஆகியோரும் சென்றனர். அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு இன்று காலை சென்னைக்கு புறப்பட்டனர்.

அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர்மன்னார்குடி புறவழிச்சாலையில் இன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரில் இருந்த பெரியண்ணன், குமார், ரகிமா, ஐஸ்வர்யா மற்றும் கார் டிரைவர் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News