செய்திகள்

வில்லியனூர் அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-06-16 15:02 GMT   |   Update On 2019-06-16 15:02 GMT
வில்லியனூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சாலாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ்குமார் கல்லூரியில் 2-ம் ஆண்டும், இளைய மகன் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர்.

இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள சரவணன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சரவணனிடம் அவரது மனைவி அஞ்சாலாட்சி வீட்டு செலவுக்கு பணம் கேட்டார். ஆனால், சரவணன் பணம் கொடுக்க மறுத்து மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது சரவணனை அவரது மனைவி அஞ்சாலாட்சி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சரவணன் பூச்செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார். இதனை செல்போன் மூலம் தனது மூத்த மகன் சந்தோஷ்குமாரிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் விரைந்து வந்து அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சரவணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரவணன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோர்க்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News