செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு

Published On 2019-06-15 11:33 GMT   |   Update On 2019-06-15 11:33 GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 6491 பணி காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ளடங்கிய பணி காலி இடங்களுக்கு இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக தயாராகும் போட்டியாளர்கள் பயன் பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது.

இப்பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் மாதாந்திர பத்திரிகைகள் கொண்ட நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

போட்டி தேர்வாளர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டும், தன்னார்வ பயிலும் வட்டத்திலேயே தேர்வுக்கு முழுமையாக தங்களை தயார்படுத்தி கொள்ளும் விதத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 14.7.2019. ஆகும்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரை அணுகி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News