ஆசாரிப்பள்ளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
நாகர்கோவில்:
மதுரை மேலூர் வடக்கு நாவீனப்பட்டியை சேர்ந்தவர் மழுவேந்தி (வயது 27). இவரது மனைவி மஞ்சு (24) இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இருவரும் குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். நேற்று கோழிப்பண்ணையில் உள்ள மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி மழுவேந்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி மஞ்சு ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அழித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், எனது கணவரும் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தோம். இரவு கோழிப்பண்ணைக்கு வெளியே சத்தம் கேட்டதை அடுத்து எனது கணவர் வெளியே வந்தார். அப்போது கோழிப்பண்ணைக்குள் நாய்கள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் எனது கணவரின் கால் பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் மேற்கு நெய்யூரைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் ஜாய்சிலின் (25) என்பவர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.