அரியாங்குப்பத்தில் வழிப்பறியில் ஈடுபட மிளகாய்பொடி-கத்தியுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது
பாகூர்:
அரியாங்குப்பம் போலீசார் நேற்றுஇரவு நோனாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள தனியார் மதுபானகடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு இருளில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் பயந்து ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கும்பலை விரட்டி மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அந்த கும்பலிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் சட்டை பாக்கெட்டுகளில் மிளகாய்பொடி மற்றும் பேனாகத்தி ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதனை பறிமுதல் செய்து அந்த கும்பலை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் சண்முகா நகர் புருஷோத்தமன் வீதியை சேர்ந்த பார்த்தீபன் (27), கோவிந்தசாலை குபேர் நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆட்டோ மணி (23), நெல்லித்தோப்பு ஒத்தவாடை வீதியை சேர்ந்த அசோக் (23) மற்றும் நெல்லித்தோப்பு பெரியார்நகர் சதீஷ் (30) நித்யகுமார் (35) என்பதும் இவர்கள் வழிப்பறியில் ஈடுபட மிளகாய்பொடி மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.