செய்திகள்

வில்லியனூரில் பீர் குடித்த பெண் உயிரிழப்பு

Published On 2019-06-15 09:48 GMT   |   Update On 2019-06-15 09:48 GMT
வில்லியனூரில் பீர் குடித்த பெண் இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வில்லியனூர்:

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் ஜமுனா (வயது 40). ஜமுனாவுக்கும், சேஷாங்கனூரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஜமுனா கணவர் முருகனை விட்டு பிரிந்து வில்லியனூர் மணவெளியை சேர்ந்த கூட்டுறவு பால் சொசைட்டி ஊழியர் புருசோத்தமன் என்பவருடன் கடந்த 9 வருடமாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அவரை விட்டு பிரிந்து கடந்த 1½ ஆண்டுகளாக வில்லியனூர் கோட்டை மேட்டை சேர்ந்த கோபி என்பவருடன் வசித்து வந்தார்.

இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்து வந்தது. நேற்று இரவு கோபி வீட்டுக்கு பீர் வாங்கி வந்தார். அதனை ஜமுனாவுக்கு கொடுத்தார். பீரை வாங்கி குடித்த பின் ஜமுனா இரவு தூங்கி விட்டார்.

இன்று காலை பார்த்த போது, ஜமுனா இறந்து கிடந்ததை கண்டு கோபி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து பீர் குடித்ததால் ஜமுனா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News