செய்திகள்

ஏ.என்.32 விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்

Published On 2019-06-14 11:17 GMT   |   Update On 2019-06-14 11:17 GMT
விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. 

இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இந்த பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோல் ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசாரும் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இதனிடையே கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் 2 நாட்களுக்குப்பின் சென்றனர். 



அப்போது விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது. மேலும் விமானத்தின் கருப்புப்பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது.  இன்று விமானியின் அறையில் இருந்த ஒலிப்பதிவு கருவியை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர். 

இந்நிலையில், இந்த விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது. கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் கடந்த 2011 முதல் விமானப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
Tags:    

Similar News