செய்திகள்

சூலூர் வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் நன்றி

Published On 2019-06-12 12:41 GMT   |   Update On 2019-06-12 12:41 GMT
சூலூர் தொகுதிக்கு சென்ற முக ஸ்டாலின் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார். “கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.க. போராடும்” என கூறியுள்ளார்.

சென்னை:

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு சென்றார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை சென்ற மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாலையில் சூலூர் தொகுதிக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த தொகுதியில் உள்ள கலங்கல், கலங்கல் பஸ் நிறுத்தம், அப்பநாயக்கன்பட்டி, ஆதி திராவிடர் குடியிருப்பு, பேருந்து நிறுத்தம், செலக்கரசல், பட்டணம், பட்டணம் புதூர் ஆகிய பகுதிகளுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள் உற்சாகத்துடன் அவரிடம் பேசி மகிழ்ந்தனர். அப்போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

‘நன்றி மறத்தல் நன்றன்று’ என்றார் வள்ளுவர். இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூரில் மக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தி.மு.க. இடை விடாது போராடும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News