பாகூரில் கணவனுடன் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
பாகூர் காலனி அம்பேத் கார் நகரை சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தானலட்சுமி (வயது34). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சந்தானலட்சுமி சார்காசி மேட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலைமுடிந்து வீடு திரும்பிய சந்தானலட்சுமி இரவு வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ் சட்னி தயார் செய்யாமல் ஏன் தோசை சுடுகிறாய் என சந்தானலட்சுமியிடம் கேட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதனால் விரக்தி அடைந்த சந்தானலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் உட்பக்கமாக பூட்டிக்கொண்டு வேட்டியால் தூக்குபோட்டு தொங்கினார்.
வெகுநேரமாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ரமேஷ் கதவை உடைத்து பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்தான லட்சுமியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தானலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.