செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அமல்படுத்த விடமாட்டேன்- நாராயணசாமி

Published On 2019-06-05 07:27 GMT   |   Update On 2019-06-05 08:18 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ராணுவத்துடன் வந்தாலும் புதுவையில் அமல்படுத்த விடமாட்டேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுவை அரசு ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனம் செயல்படுத்த முடியாது. மத்திய அரசு ராணுவத்துடன் வந்தாலும் புதுவையில் இத்திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். ஆட்சி வரும், போகும். மக்கள் நலன்தான் முக்கியம்.


எங்கள் ஆட்சியே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அனுமதிக்க விட மாட்டேன். தமிழக அரசுக்கு முதுகெலும்பு இல்லை. ஆட்சியை தக்க வைப்பதில்தான் அவர்கள் குறிக்கோளாக உள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து முதல்- அமைச்சர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து போராடவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ரவிக்குமார் எம்.பி., பொன்முடி எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்க வேண்டும். அந்த ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

புதுவை கவர்னர் அதிகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை ஒட்டியே சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு சிறப்பு வாய்ந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பும் இது போன்றே இருக்கும் என நம்புகிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த விடமாட்டோம் என முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இந்த நிலைப்பாடை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு எடுக்க முடியாமல் உள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்தவும் அனுமதிப்பதில்லை. மக்கள் நலனுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Tags:    

Similar News