செய்திகள்
கைதான துர்கன், அவரது தாய் விஜயா, நண்பர் லோகேஷ்

தலையணையால் அமுக்கி மனைவியை கொன்ற கணவர் கைது

Published On 2019-05-02 13:33 IST   |   Update On 2019-05-02 13:33:00 IST
திருத்தணி அருகே குடும்ப தகராறு காரணமாக தலையணையால் அமுக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருத்தணி கார்த்திகேயபுரம் கவுரி அம்மன் நகரைச் சேர்ந்தவர் துர்கன். இவரது மனைவி சிவபிரியா (வயது 25).

இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் சிவபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துர்க்கன் உறவினர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், சிவபிரியாவின் தாய் சுஜாதா, மகள் சாவில் மர்மம் உள்ளது என்று திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து துர்கனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மனைவி துர்க்காவை தலையணையால் அமுக்கியும் கழுத்தை நெரித்தும் கொன்றதாக துர்க்கன் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக துர்கன் போலீசாரிடம் கூறியதாவது:-

சிவபிரியாவை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டேன். அடிக்கடி சிவபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று முதல் கணவன் மற்றும் குழந்தைகளை பார்த்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

சம்பவத்தன்று, தாய் வீட்டிற்கு செல்லக்கூடாது என்று சிவபிரியாவை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் தலையணையால் சிவபிரியா முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.

நண்பர் லோகேஷ், தாய் விஜயா ஆகியோர் கொடுத்த யோசனையால் சிவபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது போல் நாடகம் ஆடினேன்.

இவ்வாறு கூறினார்.

போலீசார் துர்கன், லோகேஷ், விஜயா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News