ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்த கூடாது - திருமாவளவன்
புதுச்சேரி:
நெய்வேலில் திருமணத்திற்கு செல்லும் வழியில் புதுவையில் தனியார் ஓட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் ஏற்கனவே காலதாமதமாகி விட்டதால் தமிழக கவர்னர் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
ரகுராம் ராஜனின் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரூ.12 லட்சம் கோடி வாரக்கடன் பட்டியலை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக ரகுராம்ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரகுராம்ராஜன் அறிக்கையை பிரதமர் அலுவலகம் ஏன் இதுவரை மறைத்து வைத்துள்ளது.
மோசடி பேர்வழிகளை காப்பற்றும் அரசாக உள்ளது என்பது ரகுராம்ராஜனின் அறிக்கை சான்றாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் பட்டியலில் ரவிக்குமார் பெயரும் உள்ளதை கருத்தில் கொண்டு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பாதுகாப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பகுதிக்கும் ரவிக்குமார் சென்று அரசியல் பணியாற்ற இருப்பதால் அங்கும் பாதுகாப்பை நீடிக்க வேண்டும். தமிழக அரசும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அளிக்கப்படும்.
தமிழகத்தை போல் புதுவையிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.#RajivGandhimurdercase #Thirumavalavan