திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி
- பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
- போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்தானம் (வயது42), ராஜா (35), பிரகாஷ் (30), இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் அருகே உள்ள குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்தனர்.
ஒத்தக்கடை அருகில் எஸ்.கொடை பிரிவு பகுதியில் வந்தபோது சாணார்பட்டி யில் இருந்து மதுரை அழகர் கோவில் நோக்கி சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தானம் மற்றும் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பிரகாஷ் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியாண்டி தலைமையில் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். மீன்பிடி திருவிழாவுக்கு வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.