ஆண்டிபட்டி அருகே கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்ததாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்
- மேலும் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சொத்துக்களும் முடக்கப்பட்டன.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). சண்டியர்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (36). இவர்கள் 2 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்ததாக சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் அவர்களை கைது செய்தார்.
தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
எனவே இவர்கள் மீதான குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் பெருமாள் மற்றும் பழனிச்சாமி ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 6 பேர் கடந்த 1 மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.