தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவை உடனே அறிவிக்க வேண்டும்- திமுக வலியுறுத்தல்
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும். சில தொகுதிகளில் கடைசி ரவுண்டு வரும்போதுதான் எண்ணி முடிவை அறிவிக்க இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.
இதில் பல தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. 500 ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதாக இருந்தால் தபால் ஓட்டுகளை அதற்கேற்ப சாதகமாக்கி தேர்தல் அதிகாரிகள் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தற்போது 80 வயது உடையவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டுள்ளதால் ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் ஓட்டுகள் தபால் ஓட்டாக உள்ளது. எனவே இதில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்கு தபால் ஓட்டுகளை முதலிலேயே எண்ணி முடிவை அறிவித்து விட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.