234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கே.பாலகிருஷ்ணன் பேச்சு
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று காலை சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க. தான் ஆட்சி செய்தது. கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் செல்போன் உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்தது. ஆனால் இதில் எதையும் அ.தி.மு.க. செயல்படுத்தவில்லை.
இப்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிருக்கு ரூ.1,500 தொகையை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதே கொடுத்திருக்கலாம்.
மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றது,
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை உலகிற்கு காட்டியது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளில் 38-ல் வெற்றி பெற்றது. இதேபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.