செய்திகள்
பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி 3ந்தேதி தமிழகம் வருகை- ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

Published On 2021-03-31 07:00 GMT   |   Update On 2021-03-31 07:00 GMT
வருகிற ஏப்ரல் 3-ந்தேதி பிரியங்கா காந்தி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். தமிழகத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் அரசியல் நிகழ்ச்சி இதுவாகும்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட் பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிற 3-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வரஉள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற ஏப்ரல் 3-ந்தேதி பிரியங்கா காந்தி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதன் முறையாக அவர் ஒரு அரசியல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் பங்கேற்கிறார். நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொதுக்கூட்டமாக அமையும். தமிழகத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் அரசியல் நிகழ்ச்சி இதுவாகும்.

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அது ஒரு சிறப்பான வெற்றியாக இருக்கும். மத்திய அரசு மக்களை பிரித்தாளும் வேலையை செய்துவருகிறது. அ.தி.மு.க. கூட்டணியுடன் பாரதிய ஜனதா இணைந்துள்ளது அ.தி.மு.க.வை மேலும் வீழ்த்தும்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது அவரது தந்தை பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழகம் வருகிற பிரியங்கா காந்தி, அன்று காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவி டத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் நாகர்கோவிலில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் .

தேர்தல் ஆணையம் அவர்களின் வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் கூறினார்.
Tags:    

Similar News