செய்திகள்
தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்

Published On 2021-03-19 08:23 GMT   |   Update On 2021-03-19 08:23 GMT
பெருந்துறை தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று மனுதாக்கல் செய்தார்.
சென்னை:

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே மாவட்டமாக ஈரோடு இருந்தது. அப்போது அமைச்சராக இருந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோடு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தார்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையுடன் உலா வந்த அவர் மீண்டும் 3-வது முறையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால் வேட்பாளர் அறிவிப்பின்போது பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டாலும் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னையில் கட்சி தலைமையை அணுகி முறையிட்டார். கட்சிக்கு உண்மையாக இருப்பதாக பேட்டியும் அளித்தார். இந்த நிலையில், பெருந்துறை தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று மனுதாக்கல் செய்தார்.

ஆளும்கட்சியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த அவர் கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை அவர் அளித்தார்.

இந்நிலையில் தோப்பு வெங்கடாசலத்தை அதிமுகவில் இருந்து நீக்கி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News