பா.ஜனதா போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி உறுதி- எல் முருகன்
கோவை:
பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்தை தொடங்குவதற்காக இன்று காலை தாராபுரத்திற்கு வந்தார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எல்.முருகன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 17 தொகுதிக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. விரைவில் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். பா.ஜ.க.சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே தங்கள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி மக்களை சந்தித்து வருகின்றனர்.
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதாவில் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவில் வேட்பாளர் தேர்வு என்பது அரசியல் பின்புலம் மற்றும் அவர்களின் அரசியல் சேவை உள்ளிட்டவற்றை கண்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க.வில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுக் கோப்பானவர்கள். கொள்கைக்காக உறுதி கொண்டவர்கள். அவர்கள் கட்சி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். விரைவில் கட்சியின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.