செய்திகள்
வாழப்பாடியில் முதலமைச்சர் பிரசாரம்- ஏற்காடு அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பு
திமுக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற தயார் என்று வாழப்பாடியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வாழப்பாடி:
தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டடமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஏற்காடு தொகுதி வாழப்பாடி சென்றார். அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் கு.சித்ராவை அறிமுகம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுக செய்வதை மட்டுமே கூறி வருவதாகவும், அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசுக்கு எதிராக ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும், திமுக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற தயார் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பின்னர் கெங்கவல்லி தொகுதி தம்மம்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.நல்லதம்பிக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து, ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர், இரவு சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தங்குகிறார். தொடர்ந்து, நாளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.