செய்திகள்
திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு

திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு

Published On 2021-03-08 09:44 GMT   |   Update On 2021-03-08 09:44 GMT
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

இதற்கிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுகவில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது. முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைகட்சி வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது. ஆதரவு கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News