செய்திகள்
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது- காங்கிரசுக்கு 25 தொகுதிகள்

Published On 2021-03-07 04:35 GMT   |   Update On 2021-03-07 05:41 GMT
காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு தேர்தலில் 63 இடங்களையும், 2016-ம் ஆண்டு தேர்தலில் 41 இடங்களையும் தி.மு.க.விடம் இருந்து காங்கிரஸ் பெற்று இருந்தது. ஆனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களே தர முடியும் என்றதால் இழுபறி உருவானது.

காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் தி.மு.க. தலைவர்கள் அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்ததால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் திரை மறைவு பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

அதிலும் சுமூக தீர்வு காண முடியவில்லை. நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் கூடி ஆலோசித்தனர். அப்போது பெரும்பாலானவர்கள் காங்கிரசுக்கு தி.மு.க.விடம் இருந்து கவுரவமான தொகுதிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சிலர், ‘நாம் எதிர்பார்க்கும் தொகுதிகளை தி.மு.க. தராவிட்டால் கூட்டணியில் இருந்து விலகலாம்’ என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர்கள் தங்களை மதிக்கவில்லை என்று காங்கிரசில் அதிருப்தி உருவானது. தி.மு.க. தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ராகுலிடம் கலந்து பேசி விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்குமா? அல்லது வெளியேறுமா? என்ற பரபரப்பு நேற்று உருவானது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண நேற்று இரவு மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நேற்று இரவு 11 மணியளவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தனர். அப்போது தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம் என்றும் இரு கட்சி தலைவர்களும் தீர்மானித்தனர். இந்த தகவல்களை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று இரவு நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தி.மு.க.வுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக நிலவி வந்த தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு இன்னமும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தயாராக உள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் சரிசமமான இடங்களை வழங்க வேண்டும் என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, வேல் முருகன், ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News