செய்திகள்
கோப்புப்படம்

வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை?- தேர்தல் ஆணையம் விளக்கம்

Published On 2021-03-07 02:46 GMT   |   Update On 2021-03-07 02:46 GMT
பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவை ஆகும்.
சென்னை:

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.

கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவை ஆகும்.

வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும்.

ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச்சாவடியில் ஏற்க முடியாது.

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News