செய்திகள்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், காணொலிக் காட்சி வழியாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி.

‘விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சியில் நாளை தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2021-03-05 19:31 GMT   |   Update On 2021-03-05 19:31 GMT
திருச்சியில் நாளை ‘விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை, தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. அப்போது, 7-ந்தேதி (நாளை) திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தின் ‘‘விடியலுக்கான முழக்கம்’’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News