லைஃப்ஸ்டைல்
பாலியல்ரீதியாக அத்துமீறல்

பாலியல்ரீதியாக அத்துமீறல்- உளவியல் ஆலோசனை

Published On 2020-03-17 06:32 GMT   |   Update On 2020-03-17 06:32 GMT
ஒரு பெண்ணும், ஆணும் தோழமையாக, நட்பாக, காதலாகப் பேசுவதில், பழகுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நாம் பேசும்/பழகும் நபர் சரியானவர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
பிறக்கும்போது யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. பெற்றோர் வளர்க்கும் விதமும், சூழலும்தான் ஒருவனைக் குற்றவாளியாக்குகிறது. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு அடிபணிந்து போகும் அம்மாவைப் பார்த்து வளரும் ஒருவனுக்கு, `ஆண் என்பவன் மேலானவன், பெண் என்பவள் அவனுக்கு அடிபணிந்து போகவேண்டியவள்' என்பது மனதில் நன்றாகப் பதிந்துவிடுகிறது.

உதாரணமாக, ஒரு வீட்டில் அண்ணன்/தங்கை அல்லது அக்கா/தம்பி வளர்ந்தார்கள் என்றால் ஆண் குழந்தைக்குத்தான் பெரும்பாலான வீடுகளில் முன்னுரிமை கொடுப்பார்கள். இதுபற்றி பெண் பிள்ளைகள் கேட்டால், `நீ பொம்பளைப் புள்ள... அவன் ஆம்பளப் பிள்ளை; அவன்கூட ஏன் போட்டி போடுற' என்பதுபோன்ற பதில்கள்தான் வரும். இது ஒருபுறமிருக்க, உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத வீடுகளில் பிறந்த, பெண் பிள்ளைகளுடன் பிறக்காத ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான அடிப்படை எதுவும் தெரியாது. உடல்ரீதியான வேறுபாடுகள் மட்டுமே அவர்களுக்குள் பதிந்திருக்கும். அதனால், பெண் என்றாலே அவள் உடல்ரீதியாகப் பார்க்கப்பட வேண்டியவள் என்ற புரிதலுக்கு வந்துவிடுவார்கள். அதைத் தடுக்க, `பெண்களும் ஓர் உயிர், அவர்களுக்கும் உரிமைகள், உணர்வுகள் உண்டு' என்பதை வீடுகளில் சொல்லி வளர்க்கவேண்டும்.

படிக்காத பெற்றோர் உள்ள வீடுகளிலும், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் வீடுகளிலும் அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அரசாங்கம் நினைத்தால் பள்ளிகளில் இதற்கான வகுப்புகளை நடத்தமுடியும். ஓர்  ஆண் பெண்ணிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணர்களை நியமித்து, கவுன்சலிங் கொடுக்கலாம். மனதளவில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் வெளிப்படையாகப் பேசுங்கள் என மாணவர்களுக்குச் சொல்லலாம்.

பெரும்பாலும் ஆணும், பெண்ணும் இணைந்து படிக்கும் பள்ளியில் படிக்கும்போது பெண்களை சக மனுஷியாக அணுகும் பண்பு, ஆண் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும். மாறாக, பெண்களைத் தூரத்திலேயே வைத்துப் பார்த்த ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். அது உடல்ரீதியான மோகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் முடியும். இதுபோன்ற செயல்களைச் செய்தாலன்றி பெண்களின்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு விடிவு கிடைக்காது.

சமீப காலமாக பெருகிவரும் இணைய வளர்ச்சியை இதுபோன்ற செயல்களுக்கு சிலர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணும், ஆணும் தோழமையாக, நட்பாக, காதலாகப் பேசுவதில், பழகுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நாம் பேசும்/பழகும் நபர் சரியானவர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. தொடர்ந்து ஒரு ஆண் உடல்ரீதியாக வர்ணனை செய்து பேசிக்கொண்டிருக்கிறான் என்றால் அவனிடம் சிறிது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, ஆணும், பெண்ணும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பதுபோன்ற கருத்துகள், இதுபோன்ற குற்றங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதனால், தங்களுக்கான எல்லைக் கோடுகளை வகுத்துக்கொண்டு பேசுவது, பழகுவது நல்லது.

அதேபோன்று, எவ்வளவு நம்பிக்கையான நபராக இருந்தாலும், தங்களது அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரிடம் பகிரக் கூடாது. அதே வேளையில், தனக்குத் தெரியாமல் தன்னுடைய புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, பரப்பப்படுகிறது என்றால் அதற்காகப் பெண்கள் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை. தங்களது பெற்றோரிடம் சொல்லிச் சம்பந்தப்பட்டவர்கள்மீது புகார் செய்ய முன்வரவேண்டும்.

அதேபோல, தன் விருப்பம் இல்லாமல், ஓர் ஆண் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறுகிறான், துன்புறுத்துகிறான், எதையாவது சொல்லி மிரட்டுகிறான் என்றால் தைரியமாக அதைப் பெற்றோரிடம் சொல்ல பெண்கள் முன்வரவேண்டும். தெரிந்தவன், நன்றாகப் பழகியவன், சொந்தக்காரன், தெரியாத யாரோ ஒருவன்... இப்படி யாராக இருந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிடவேண்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் சொல்லுக்கு மதிப்பளித்து, அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டு அதற்குத் தீர்வு சொல்லவேண்டும்.

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தாலும், வீட்டில் அதைச் சொல்லுமளவுக்கான சுதந்திரத்தையும், உரையாடல் வெளியையும் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு என்றில்லாமல் சிறுவயதிலிருந்தே அதைத் தொடங்கவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற பெரும் அவலங்களில் சிக்கிக் கொள்ளாமல் நம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்'' என்கிறார் உளவியல் நிபுணர்.
Tags:    

Similar News