லைஃப்ஸ்டைல்
வீட்டுக்கடன்

வீட்டுக்கடன் தாராளம் ஏன்?

Published On 2020-02-06 03:02 GMT   |   Update On 2020-02-06 03:02 GMT
சொந்த வீடு கனவில் இருக்கும் பலருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன.
சொந்த வீடு கனவில் இருக்கும் பலருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தோன்றி 110 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாகத்தான் வீட்டுக் கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராள போக்கை கடைபிடித்து வருகின்றன. வங்கிக் கடன் திட்டங்கள் பலவற்றில் இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம்.

சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. சொல்லப்போனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தருகி றார்களே, அது எப்படி? இதற்குமுக்கியக் காரணம் வங்கிக்குக் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான செக்யூரிட்டி தான்.

வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்கு தேவையான தளவாடங்கள் வாங்குவதற்கு கடன் வாங்கினால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். ஏனென்றால், மோட்டார் வாகனமோ, மற்ற வாகனங்களோ, தொழிற்சாலை தளவாடங்களோ சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு பிறகு அவற்றை விற்கப்போனால் வாங்கிய விலையைவிடக் குறைந்த விலைக்குத்தான் போகும். அதே நேரத்தில் வீடு அல்லது மனையை பொறுத்தவரை பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் போகுமே தவிர குறையாது. உலக அளவிலும் இதே நிலைமைதான். மிக அரிதாக சில கால கட்டங்களில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் அது விதிவிலக்கு. உலகில் உள்ள நிலப்பரப்பு அதிகரிப்பதில்லை. ஆனால், மக்கள் தொகை அதிகரிக்கிறது. வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கடனை திருப்பி கட்டுவதற்குப் போதிய அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ. முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது. ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்த கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அல்லது கோபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்தரவாதத்தை வங்கிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.

கடனை திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கின்றன. நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. காரணம், இ.எம்.ஐ. கட்டுவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது, குடும்பச் செலவுக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதுதான் அதற்கான காரணம் ஆகும்.
Tags:    

Similar News