லைஃப்ஸ்டைல்
கள்ளக்காதல்: பெண்களை மட்டும் பழி கூறுவது சரியானதல்ல (கோப்பு படம்)

கள்ளக்காதல்: பெண்களை மட்டும் பழி கூறுவது சரியானதல்ல

Published On 2019-11-07 06:39 GMT   |   Update On 2019-11-07 06:39 GMT
கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் மதிப்பு கொடுத்து செயல்பட்டால் கள்ளக்காதல் என்றில்லாமல் காதல் குறித்து மரியாதை ஏற்பட்டு இனிமையான இல்லறம் தழைத்தோங்கும்.
கள்ளக்காதல் என்ற பெயரே தவறானது. முறையற்ற காதல் என்பது சரியானது. ஆண் பெண் இருவருக்கும் இது பொதுவானது. இந்த முறையற்ற காதலால் கொடூரமான கொலைகள் ஆள் கடத்தல் கொடூர தாக்குதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு பெண்களை மட்டும் பழி கூறுவது சரியானதல்ல. இன்று வளர்ந்து வரும் சூழலில் சமூக பொருளாதார மாற்றங்களினால் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிகின்றனர்.

இனிவரும் காலங்களில் பெண்கள் வீட்டை விட பணிபுரியும் இடத்தில் தான் அதிகநேரம் செலவிட வேண்டியது இருக்கும். மேலும் மாறி வரும் குடும்ப சூழ்நிலையால் கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு குறைந்து இப்போது கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் என்ற தனிக்குடித்தன வாழ்க்கையாக மாறிவிட்டது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலக்கட்டத்தில் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கலந்து பேசி சுமுக தீர்வு காண வழி வகை செய்வர்.

ஆனால் தற்போது தங்கள் வீட்டு பிரச்சினைகளை நண்பர்களிடமும் பணியில் உடன் பணிபுரிபவர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கணவன் மற்றும் மனைவியிடம் உள்ள குறைகளை உடன் பணிபுரிபவர்களிடம் கொட்டி தீர்க்கிறார்கள். இதன் விளைவாக இன்னொருவரிடம் உணர்வு சார்ந்த சார்புநிலை உருவாகிறது.

இது காலப்போக்கில் அடுத்தடுத்த நிலையை எட்டுகிறது. பெரும்பாலும் ஒரு ஆண் அல்லது பெண் பிறரின் மேல் தோன்றும் ஈர்ப்பிற்கான காரணம் தங்கள் மனதிலுள்ள ஆசைகள் மற்றும் கற்பனைகளால் தான். அவ்வாறான ஆசைகளையும் கற்பனைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் சூழ்நிலை அமையும் போது இவ்வாறான உறவுகள் தோன்றலாம். அதுவே ஒரு கட்டத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இல்லறத்தின் கோட்பாடுகள் இன்றைய வாழ்வியல் சூழலுக்கேற்ப பலவாறு மாறிவிட்டன.

இன்றைய காலத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்தியத்தை தோழமையோடு இணையாக வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் இனிமையானதாகும். தம்பதியர் தங்கள் இணையரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் தங்களின் வாழ்வின் முக்கிய முடிவுகளை சேர்ந்து விவாதித்து நடைமுறைப்படுத்துதல் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். தம்பதியர் தங்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக தெரிவித்தலும் அதை மற்றவர் செவிமடுத்தலும் வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

வெவ்வேறான வாழ்வியல் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து திருமண பந்தத்தில் இணையும் இருவர் வாழ்வில் பயணிக்கும் போது ஏராளமான சவால்கள் ஏற்படலாம். ஆதலால் ஆண் பெண் இருவரும் சமம் என்பதும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சார்புநிலை கொண்டால் மட்டுமே இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க இயலும்.



சிலருக்கு திருமணமே கட்டாய திருமணமாக அமையும் வாய்ப்பு ஏற்படுகிறது. சாதியினாலோ பொருளாதார சூழ்நிலையினாலோ தான் விரும்பும் நபரை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுவும் ஒரு காரணமாக சில சமயங்களில் தெரிகிறது. பெருகி வரும் போதை பொருள் சம்பந்தமான காரணங்களினாலும் பொருளாதார பிரச்சினைகளினாலும் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. மேலும் சில மன வியாதிகளினால் கணவன் மேல் மனைவிக்கோ அல்லது மனைவி மேல் கணவனுக்கோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேக உணர்வு ஏற்படுகிறது.

இதன் காரணமாக மனைவியை பின் தொடர்வதும் மனைவி பால்காரர் காய்கறி விற்பவர் மளிகை கடைக்காரர் என்று யாரிடம் பேசினாலும் சந்தேகம் கொண்டு மனைவியிடம் சண்டை போடுவதும் சாதாரணமாக நடக்கிறது. இதனால் மனைவி கோபப்பட்டு கணவனை விட்டு விலகிப்போனாலும் சகித்துக்கொள்ளாமல் கணவன் அவளை விடாமல் தொல்லை கொடுப்பதும் நடக்கிறது. ஒரு சிலர் மிகுந்த கோபத்துடன் மனைவியை துரத்திச்சென்று அவரை கொலை செய்யும் கொடூர நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையை போக்க சந்தேக உணர்வு ஏற்படும் நபரை சீக்கிரமாகவே கண்டறிந்து உடனடியாக மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றால் பல பிரச்சினைகளை தடுக்க முடியும். மேலும் ஆண்கள் பெண்களை மதித்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பெண்களும் அது போன்றே திருமணம் என்ற பந்தம் பிடிக்காவிட்டால் சுமுகமாக பிரிந்து செல்வது என்ற முடிவை எடுக்க வேண்டும். இருவரும் பரஸ்பரம் மதிப்பு கொடுத்து செயல்பட்டால் கள்ளக்காதல் என்றில்லாமல் காதல் குறித்து மரியாதை ஏற்பட்டு இனிமையான இல்லறம் தழைத்தோங்கும்.

தவிர்க்க முடியாக சூழ்நிலைகளில் திருமணம் என்னும் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவது இவ்வாறான முறையற்ற காதலை தவிர்க்க உதவியாக இருக்கும். இவ்வாறான உறவுகளினால் ஏற்படும் மனசோர்வு பதற்றம் தற்கொலை எண்ணங்கள் மற்றும் வன்முறை போன்ற எண்ணங்களுக்கு மனநல சிகிச்சையும் மேற்கொள்ளலாம். மேலும் இவ்வாறான முறையற்ற காதலால் குடும்பங்கள் பிரிவுறும் போது குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வாறான குழந்தைகளுக்கு மனச்சோர்வு பதற்றம் படிப்பில் கவனமின்மை போன்றவை ஏற்படலாம். அக்குழந்தைகளுக்கு சிறப்பு கவனமளித்து தேவை ஏற்பட்டால் மனநல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கலாம்.

டாக்டர் பூர்ணசந்திரிகா இயக்குனர் அரசு மனநல காப்பகம் கீழ்ப்பாக்கம்.
Tags:    

Similar News