லைஃப்ஸ்டைல்
பெண்களே போரடிக்காமல் வேலை செய்ய யோசனைகள்

பெண்களே போரடிக்காமல் வேலை செய்ய யோசனைகள்

Published On 2019-09-28 06:17 GMT   |   Update On 2019-09-28 06:17 GMT
எவர் ஒருவர், செய்யும் வேலையைக் காதலித்துச் செய்கிறார்களோ, அவர்களே அலுவலகத்தின் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறார்கள். அவர்களால் மட்டுமே, போரடிக்காமல் ஸ்மார்ட்டாக வேலையைச் செய்து முடிக்க முடியும்.
குறைந்தது ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அலுவலகத்தில்தான் செலவிடுகிறீர்கள். அப்படியிருக்க உங்களுக்குக் கிடைக்கும் எஞ்சிய நேரத்திலும் வேலை நினைப்பை மண்டைக்குள் போட்டுக்கொண்டு டென்ஷன் ஆக வேண்டாம். செய்யும் வேலைகளில் ஒரு பிடிமானம் இல்லாமல், போரடிக்கிறது எனப் புலம்புபவர்கள்தான் நம்மில் அதிகம். இதற்குக் காரணம் வேலையின் மீது நாட்டமின்மைதான். எவர் ஒருவர், செய்யும் வேலையைக் காதலித்துச் செய்கிறார்களோ, அவர்களே அலுவலகத்தின் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறார்கள். அவர்களால் மட்டுமே, போரடிக்காமல் ஸ்மார்ட்டாக வேலையைச் செய்து முடிக்க முடியும்; எல்லா இடங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்தி வெற்றி காண முடியும். அதனால்...

1. வேலை நேரத்தில் வேலைகளுக்கு இடையில் ஐந்து நிமிடம் பிரேக் கிடைத்தாலும், உங்கள் வேலையிடத்தைவிட்டு அகலுங்கள். லேப்டாப், இமெயில், மொபைல்போன் இவற்றிலிருந்து விடுபடுங்கள். அதேபோல லன்ச் நேரத்தைத் தவறவிடாதீர்கள். ஏனெனில், லன்ச் நேரம் என்பது உணவுக்காக மட்டுமல்ல, ஃபிரெஷ்ஷான வெளிக்காற்றுக்கும் மனதுக்கு ஓய்வளிப்பதற்கும்தான். குறைந்தது ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை அலுவலகத்தில்தான் செலவிடுகிறீர்கள். அப்படியிருக்க, உங்களுக்குக் கிடைக்கும் நேரத்திலும் வேலை நினைப்பை மண்டைக்குள் போட்டுக்கொண்டு டென்ஷன் ஆக வேண்டாம். அலுவலகத்தைவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடமே, மனதளவில் `குட் பை’ சொல்லிவிடுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் உற்சாகமாக அலுவலகத்துக்குள் நுழைய முடியும்.

2. வேலை மகிழ்ச்சியாக இல்லையென்றால், உங்களுக்கு அதில் போரடிப்பதும் இயல்புதான். வேலையில் அதிகபட்ச ஈடுபாட்டுடன் பணியாற்றும்போதுதான், பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என்கிறது ஆய்வு. தற்போதைய வேலையில் நீங்கள் கற்றுக்கொள்ள எதுவுமில்லை எனத் தோன்றினால், வேலையை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றவும், நிறுவனத்துக்குப் பயனுள்ள வகையில் இருக்கவும், புதிய திறன்கள் அல்லது புதிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் முயலுங்கள். உங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வழிகளைச் சிந்தியுங்கள். இது பணிப் பாதுகாப்பையும் திருப்தியையும் தரும். வேலை தொடர்பான அல்லது திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இந்த அறிவு, தற்போது பயன்படாமல்போனால்கூட, பிறகு உங்கள் விருப்பத்துக்கேற்ற தகுதியான வேலையைப் பெற உதவியாக இருக்கும்.

3. எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் எல்லாவற்றைப் பற்றியும் குறைபட்டுக்கொள்வதில் சுகம் காணும் மக்கள் இருக்கவே செய்வார்கள். உங்கள் பாஸ் எந்த அளவுக்கு முட்டாளாக இருக்கிறார், நிறுவனம் உங்களை எப்படிச் சுரண்டுகிறது, மற்ற தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், தேவையில்லாத வேலைகள்… இப்படிச் சொல்லிச் சொல்லியே உங்களை நம்பிக்கையிழக்கச் செய்பவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து எதிர்மறையான விஷயங்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்போது, இருக்கும் நேர்மறையான விஷயங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாது. இது அந்த இடத்தைப் பற்றி, அங்கு பணிபுரிபவர்களைப் பற்றி மேலும் மோசமாக உணரச் செய்யும். வேலை மீது இவ்வாறு நீங்கள் உணர்ச்சிவசப்படாதவாறு காத்துக்கொள்ள, நேர்மறையாகச் சமநிலையுடன் பேசும் நபர்களுடன் நேரத்தை அதிகம் செலவிடலாம்.

4. உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு போதுமான ஆர்வத்தை நீங்கள் காட்டவில்லையெனில், அது வெறும் வேலையாகத்தான் இருக்கும். ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்த பிறகு கிடைக்கும் திருப்தி அலாதியானது. வேலையை அனுபவித்துச் செய்யாமல், கடமையே என ஈடுபாடின்றி செய்தால், அந்தத் திருப்தியை என்றைக்குமே உங்களால் உணர முடியாது. ஆகவே, உயர்ந்த அளவுகோல்களை நிர்ணயுங்கள். முடிந்த அளவுக்கு வேலையைச் சிறப்பாகவும் தரமாகவும் செய்யுங்கள். மற்றவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள் என்று நீங்களும் ஏனோதானோவென்று வேலை செய்ய வேண்டாம். நீங்கள் செய்யும் வேலையின் தரமானது உங்கள் கேரக்டரையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. செயலில் இறங்கிவிட்டால் கவலைப்பட நேரமிருக்காது.

5. வேலையில் போரடிப்பதாக உணரும் பலருக்கும், அது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிருப்தியாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் மனதை உற்சாகம்கொள்ளவைக்கும் இன்ஸ்பிரேஷனை வேலைக்கு வெளியேயிருந்து பெறுவது, வேலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்வுரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறும்போது, அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சரிப்படுத்துவதால், அதன் விளைவாக வேலையிலும் உங்களால் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் இயங்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருந்து, உங்கள் வேலையில் மேம்படுவதற்கு நீங்கள் எதுவும் முயலவில்லை எனில், உங்கள் வேலையை அல்லது கரியரை மாற்றிக்கொள்வது பற்றி சிந்திப்பது நல்லது.
Tags:    

Similar News