லைஃப்ஸ்டைல்
கணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

கணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

Published On 2021-02-18 06:26 GMT   |   Update On 2021-02-18 06:26 GMT
கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் ஆண்களின் உயிரணுக்களைப் பாதிப்பதால், அவர்களுக்கு குறைபாடான அணுக்கள் உருவாகும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குழந்தை எடை குறைவாகவும் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின் குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநூறு கிராம் குறைவான எடையுடன் இருக்கும்.

கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.

அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.

திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றுதல் போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.

கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல் தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.

இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.
Tags:    

Similar News