லைஃப்ஸ்டைல்
கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும்... உணவுப்பழக்கமும்...

கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும்... உணவுப்பழக்கமும்...

Published On 2021-02-17 03:24 GMT   |   Update On 2021-02-17 03:24 GMT
கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது.
கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்த நோயில் இருந்து மீண்டு விடலாம்.

பொதுவாக மாதவிடாய் முடிவடையும் காலகட்டத்தில் கருப்பையில் வீக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் தோன்றலாம். அதுபோல் கருத்தரிக்கும் காலகட்டத்திலும் கருப்பையில் வீக்கம் தோன்றக் கூடும். கருப்பையின் உள் பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியத்தின் செல்கள் அசாதரணமாக வளரும்போது எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோய் பெண்கள் தாய்மை அடையும் திறனை அழிக்கக்கூடும்.

மாதவிடாய் காலம் தவிர மற்ற சமயத்தில் திடீரென்று உறுப்பு பகுதியில் ரத்தப்போக்கு அல்லது வேறு திரவம் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் அது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவதும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்.

வறுத்த, பொரித்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்றவையும் கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. அதனால் கருத்தரிக்க முடியாமை, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர கருப்பையில் ஏற்படும் அழற்சியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வயிற்று பிடிப்பு, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்குடன் வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உடல் பலவீனம், இடுப்பை சுற்றி கொழுப்பு படிவது, கால்வலி, வீக்கம், உடல் உறவின்போது கடுமையான வலி போன்றவை கருப்பை அழற்சிக்கான அறிகுறிகளாகும்.

கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது. போதிய உடல் உழைப்பு இல்லாவிட்டாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரத்தம் சரியாக சென்றடையாது. அதாவது உடல் இயக்க செயல்பாடு இல்லாவிட்டால் கருப்பை தசைகள் பலவீனமடைந்துவிடும்.

தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அது போல் எளிமையான உடற்பயிற்சிகளையாவது சில நிமிடங்கள் செய்ய வேண் டும். அவ்வாறு செய்து வந்தால் கருப்பை தசைகள் நெகிழ்வடையும். யோகா செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

கருப்பை வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறு எடுத்து பருகலாம். இவை கருப்பை வீக்கத்திற்கு நிவாரணமளிக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காபியாக தயாரித்து வாரத்தில் ஓரிருநாட்கள் பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம். பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரண்டு வேளை பருகுவதும் நல்லது. பாதாம் பால் பருகுவதும் இதமளிக்கும்.
Tags:    

Similar News