பொது மருத்துவம்

குரங்கு அம்மை: தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...

Published On 2022-08-10 08:44 GMT   |   Update On 2022-08-10 08:44 GMT
  • குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது.
  • குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, குரங்கு அம்மை உலகளவில் பரவும் திறன் கொண்டது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு முதல் உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்ப்போம்.

குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

1958-ம் ஆண்டு ஆய்வக நோக்கக்களுக்காக பயன்படுத்தப்பட்ட குரங்குகளில் இருந்து இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது.

இந்த நோய் பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. தற்போது உலகமெங்கும் பரவ தொடங்கியுள்ளது.

குரங்கு அம்மை நோய் எவ்வாறு பரவுகிறது?

இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. நோய் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்புகொள்வது, அவர்கள் பயன்படுத்திய அசுத்தமான படுக்கையை தொடுவது, நோய் பாதிப்புக்குள்ளான விலங்கு கடிப்பது, பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகளை தொடுவது போன்றவை மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்னென்ன?

முகம் அல்லது உடலின் பிற பகுதிகளில் தடிப்பு, கொப்புளங்கள் உருவாகுவது, காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடல் குளிர்ச்சி அடைவது, சோர்வு ஏற்படுவது, வீக்கம் உண்டாவது போன்றவை குரங்கு அம்மை நோயின் சில அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டால், உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் பிறந்த குழந்தைகள், சிறு வயது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களும் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

குரங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

இது பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானால் சோர்ந்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கேற்ப உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை தொற்றை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

குரங்கு அம்மை பாதிப்பை எவ்வாறு தடுக்கலாம்?

பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சோப் பயன் படுத்தி கைகளை கழுவ வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

குரங்கு அம்மை பாதிப்பு ஏன் கவலைக்குரியது?

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகளில் ஒருவர் இறக்கிறார். அவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக உள்ளனர். இருப்பினும் லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் சில வாரங்களில் முழுமையாக நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவார்கள். இந்த வைரஸ் பொதுவாக சுவாசப் பாதை, கண்கள், மூக்கு அல்லது வாய் பகுதியில் வீக்கம், காயங்களை ஏற்படுத்தும். மருத்துவ ஆலோசனையை முறையாக பின்பற்றுவதன் மூலம் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.

எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்?

குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை. இருப்பினும், பெரியம்மை தடுப்பூசி மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.

குரங்கு அம்மையை ஏற்படுத்தும் வைரஸ், பிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. ஒட்டுண்ணிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் மூலம் பரவுகிறது. மனிதர்கள் மற்றும் குரங்குகள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். முதன் முதலில் 1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் பல குரங்குகள் இறந்தன. அதன் பின்னர் மக்கள் நோய்வாய்ப்பட்டனர்.

Tags:    

Similar News