லைஃப்ஸ்டைல்
சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் மீண்டும் தோன்றாமல் தடுப்பது எப்படி?

Published On 2020-03-10 07:30 GMT   |   Update On 2020-03-10 07:30 GMT
சிறுநீரகப் பாதையில் சிறுநீர் நீண்ட நேரம் தங்கி இருந்தால்கூட கற்கள் ஏற்படலாம். நீரில் படிகம் படிவது சுண்ணாம்பு போலத்தான்!. எப்போதும் அடக்கி வைக்கக் கூடாது.

“நான் எல்லோரையும் போன்றுதான் சாப்பிட்டேன்? எனக்கு மட்டும் சிறுநீரகத்தில் கல் எப்படி வந்தது?”

“இரண்டு முறை ஆபரேஷன் செய்து கல்லை எடுத்தாயிற்று, இப்போது மீண்டும் சிறுநீரகத்தில் கல்லாம். ஏன் இப்படி மீண்டும் மீண்டும் தோன்றுகிறது?”

இப்படி பெரும் பிரச்சினையாக இருப்பது சிறுநீரகக் கற்கள். கற்கள் மீண்டும் மீண்டும் தோன்றக் காரணம், நமது உடலில் தாது உப்புக்களை ஜீரணிக்கும் தன்மை குறைவதுதான். இது ஒருவருக்கொருவர் மாறுபடும். இதுதான் பெரும்பான்மையானவர்களுக்குக் கற்கள் ஏற்படக் காரணம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள தாது உப்புகள் ஜீரணிக்கப்பட்டு, ரத்தத்தை அடைகிறது. கல்லீரலில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தாது உப்புகள் அந்தந்த உறுப்பு களுக்கு எடுத்துச் செல்லப் பட வேண்டும். இந்த வேதியல் மாற்றம் நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் கனிம தன்மையைப் பொருத்தது. உணவில் தாது உப்புக்கள் இருந்தாலும் சிலருக்கு மிக எளிமையாக உடல் ஏற்றுக் கொண்டு சிறுநீரில் வெளியேறி விடுகிறது. அதிகபடியான தாது உப்புகள் சிறுநீரில் வெளியேறும்போது ஒன்றுக்கொன்று ‘கெமிக்கல் ரியாக்‌ஷனை' ஏற்படுத்தி சிறு சிறு கற்களை உருவாக்கும். கெமிக்கல் ரியாக்‌ஷனை ‘சிட்ரேட்’ உப்பு தடுக்கும். இதன் குறைபாட்டினால் கூட கற்கள் ஏற்படலாம்.

சிறுநீரகப் பாதையில் சிறுநீர் நீண்ட நேரம் தங்கி இருந்தால்கூட கற்கள் ஏற்படலாம். நீரில் படிகம் படிவது சுண்ணாம்பு போலத்தான்!. எப்போதும் அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றியதும் கழிப்பது நல்லது. புராஸ்டேட் சுரப்பி வீக்கம், சிறுநீர் பாதை அடைப்பு போன்று சிறுநீர் தேங்க பல காரணங்கள் உள்ளன.

சிறுநீரகப் பாதையில் உள்ள புண்களும் கற்களுக்கு அடிகோலும், புண்களின் சுவடுகள் மீது தாது உப்புக்கள் படிந்து கற்களை சிறிது சிறிதாக உருவாக்கும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சீழ்வடிதல் போன்றவை இருந்தால் சிகிச்சையை பெற தாமதிக்கக் கூடாது. இவை சிறுநீர்பாதையில் புண்கள் உள்ளது என்பதை காட்டும் அறிகுறியாகும்.

நமது உடலில் இரண்டு சிறுநீர் பைகள் வயிற்றின் இருபக்கமும் துவரை விதைபோன்று இருக்கிறது. இங்கு சுரக்கும் சிறுநீர் சிறுநீர் குழாய் மூலம் சிறுநீர் பையில் சேமித்து வைக்கப்படும். கற்களின் பிறப்பிடம் சிறுநீரகங்கள்தான். இரண்டிலும் கற்கள் தோன்றலாம். பெரும்பாலும் 4 மி.மீ. முதல் 2.5 செ.மீ. வரை கூட கற்கள் இருக்கும். சிலருக்குப் புனல் போன்ற அடைப்பு முழுவதையும் அடைத்து பெரிய கல்லாக இருக்கும். கற்கள் சிறியதாக இருக்கும்போது தொந்தரவு ஏற்படாது. கற்கள் பெரியதாகி சிறுநீர் பாதையின் நுழைவுவாயை அடைக்கும் போதுதான் வலி தெரிய வரும். கற்கள் பெரியதானதும் முதுகுப் பக்கத்தில் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ‘நறுக் நறுக்’ என வலி தோன்ற ஆரம்பிக்கும். மாடிப்படிகளில் ஏறும்போது அல்லது வண்டிகளில் பயணம் செய்யும்போது உணரலாம். பெரும்பாலும் இது சாதாரண வலி, செரிமான கோளாறு என அலட்சியப்படுத்தி விடுவார்கள். வலி ஏற்பட்டபின் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கலந்து மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் கற்கள் நிச்சயம் இருக்கும்.

கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்க் குழாயை கடக்கும்போதுதான் வலி கொடூரமானதாக இருக்கும். பக்கவாட்டில் தோன்றும் வலி, மர்ம உறுப்புகள் உள்ளங்கால்கள் வரை கூட ஊடுருவிச் செல்லும். வலி கடுமையாக இருந்தால் தலைச்சுற்றல், வாந்தி எடுப்பதும் உண்டு. வலி தாங்க முடியாமல் புரண்டு படுக்கும்போது கல் பாதையை விட்டு அகன்றதும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். பெரும்பான்மையான நோயாளிகள் வலி மீண்டும் மீண்டும் தோன்றிய பின்னர் தான் எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

கற்கள் 1 செ.மீ.க்கும் குறைவாக இருந்தால் சிறிது சிறிதாக சிறுநீர்க் குழாய் வழியாக நகர்ந்து சிறுநீர் பையை அடையும். சிலருக்கு 1.5 செ.மீ அளவு கூட அடைத்துக் கொள்வது உண்டு. ஒரு சிலருக்கு இந்த அடைப்பு சிறுநீரை, சிறுநீரகத்தில் தேங்கச்செய்து வீக்கத்தை உண்டு பண்ணும். சிறுநீரகப் பழுதால் ரத்த அழுத்தம் அதிகமாவதும் உண்டு.

கற்களில் பல வகையுண்டு. இதில் கால்சியம் ஆக்ஸ்லேட், கால்சியம் பாஸ்பேட் கற்கள்தான் அதிகம். யூரேட், சிஸ்டைன் கற்களும் உண்டு. சிலருக்கு மணிக்கட்டு கணுக்கால்களில் மட்டும் மூட்டுவலி இருக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகமாகி `கவுட்' எனப்படும் தொந்தரவைக் கொடுக்கும். இந்நோய் உடையவருக்கு யூரேட் கற்கள் தோன்றும். ஒரு சிலருக்கு அவ்வப்போது ‘மணல் போல்' சரளைகற்கள் தோன்றுவது தீராத ஒன்றாக இருக்கும்.

சிறுநீரகக் கற்களை அறிகுறிகளை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளின் மூலம் மட்டுமே உறுதியாகக் கூறமுடியும். சிறுநீரையும் பரிசோதனை செய்து தாது உப்புக்களை கணிக்கலாம். ரத்தக்கசிவை சிவப்பணுக்களின் அளவைக் கொண்டு அறியலாம்.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை தவிர்க்க வேண்டும். பால், முட்டை, மீன், மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. ஆக்ஸ்லேட் உள்ளவர்கள் தக்காளி, கீரை வகைகளை தவிர்க்கலாம். அவரை, பீன்ஸ், பட்டாணி, சுண்டல், முருங்கை போன்றவைகளை யூரிக் ஆசிட் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்கலாம். மது கல்லீரலை பாதித்து உட்கிரகிக்கும் தன்மையை சீர்குலைக்கும். தண்ணீர் நாள் தோறும் அதிகம் குடிக்கலாம். வாழைத் தண்டுச்சாறு, கொள்ளுரசம் போன்றவை அதிகமான சிறுநீரை வெளியேற்றும் தன்மை வாய்ந்தவை, இவைகளை உணவில் சேர்க்கலாம். எலுமிச்சை பழத்தில் ‘சிட்ரேட்” உப்பு இருப்பதால், சர்பத்தாக அருந்தலாம். இது கற்கள் உருவாகுவதை தடுக்கும்.

சிறுநீரக கற்களால் வலி ஏற்படுவதை தவிர்க்க வலி நிவாரணிகளை நாடுவதும், சிறுநீரை அதிகமாக வெளியேற்றி கரைக்க முயல்வதும், இதற்கான முதல் முயற்சியாக இருக்கும். கற்கள் பெரிதாக இருந்தால், ‘லித்தோடிரிப்சி’ உயர் அழுத்த கதிர்வீச்சு மூலம் கற்களை உடைப்பது நடைமுறையில் உள்ளது. எனினும் கற்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக துயரத்தை தரும்.

ஹோமியோபதி மருத்துவம் மூலமும் சிறுநீரக கற்களை கரைக்க முடியும். மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள் மூலப்பொருட்களை படிப்படியாக குறைத்து வீரியப்படுத்தி அளிக்கப்படுவதால், நரம்பு மண்டலத்தை தூண்டும் சக்தியை பெறுகிறது. நரம்பு மண்டலம் இயற்கையாக உடல் இயக்கத்தை சீராக்கி கற்கள் மீண்டும் வராமல் தடுக்கிறது. பக்க விளைவுகள் இருக்காது. மேலும் கற்களை கரைக்க தாய்திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை கற்களை கரைக்க வல்லவை. அவசரகால சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரக கற் களுக்கு வித்திடும் சிறுநீரக பாதை எரிச்சல், அடைப்பு, புராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கும் குணம் கிடைக்கும்.

-டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் M.D (Hom)

ஹோமியோபதி மருத்துவர், சென்னை.
Tags:    

Similar News