லைஃப்ஸ்டைல்
சீத்தா பழம்

ஊட்டச்சத்து நிறைந்த சீத்தா பழம்

Published On 2020-01-12 05:14 GMT   |   Update On 2020-01-12 05:14 GMT
ஊட்டச்சத்து நிறைந்த சீத்தா பழத்தின் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கிச் சாப்பிடுவீர்கள்.


சீத்தாப்பழம் பல அபூர்வ சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்டது. சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சதைப் பற்றுள்ள இந்தப்பழம் அனைத்து இடங்களிலும் காணப்படும். இந்தப்பழத்தின் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும். வைட்டமின் சி போன்ற ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் வலிமையாக உள்ள பழம்தான் சீத்தாப்பழம். இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள ப்ரி-ரேடிக்கில்ஸ்களை நீக்கும். இது போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பலருக்கு இந்த சதைப்பற்றுள்ள பழத்தின் மீது நாட்டம் இருப்பதில்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்தால் அதனை ஒவ்வொரு சீசனிலும் கண்டிப்பாக வாங்கிச் சாப்பிடுவீர்கள்.

சீத்தாபழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

புரதம் 1.6 கிராம், நார்ச்சத்து 3.1 கிராம், மாவுப்பொருள் 23.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம், கால்சியம் 17 மி.கிராம், பாஸ்பரஸ் 47 மி.கிராம், இரும்புச்சத்து 1.5 மி.கிராம், தாமிரம் 0.52 மி.கிராம், குளோரின் 3.7 மி.கிராம், தயாமின் 0.07 மி.கிராம், ரைபோஃபிளேவின் 0.20 மி.கிராம், நியாசின் 1.3 மி.கிராம், வைட்டமின் சி 37 மி.கிராம், ஆக்சாலிக் அமிலம் 30 மி.கிராம், கலோரிகள் 104 கலோரி, மக்னீசியம் 1.2 மி.கிராம், பொட்டாசியம் 0.5 மி.கிராம்.

சீத்தாப்பழ இலையின் மருத்துவப்பயன்கள்:

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது. சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து சீரான அளவில் வைக்க உதவுகிறது. இந்த இலைகளை 5 எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்கும்.

சீத்தாபழ இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது என்றால் மிகவும் வியப்பாகத்தான் இருக்கும். இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. எனவே சீத்தாப்பழ இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுக்கின்றது.

பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகின்றது. இந்த இலைகளில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் கைகளின் மூட்டு பகுதிகளையும், கால்களின் மூட்டையும் அதிகம் வலுப்பெற செய்யும். இதனால் எலும்புகள் வலுவடைகின்றன.

சீத்தாப்பழ இலைகளை உலரவைத்து இதை பொடியாக செய்து வைத்துக்கொண்டு. இந்த பொடி 1 டீஸ்பூன் 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து வர பல நாட்களாக உள்ள காய்ச்சல் குணமாகும். உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சீத்தாப்பழ இலை 5 எடுத்து இந்த பச்சை இலையுடன் 1 டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர ஹைப்போதைராய்டு ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. தைராய்டு ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவுகிறது.

சீத்தாபழ இலைகளில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதய கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்திற்கு சீத்தாப்பழ இலையை எண்ணைய் விட்டு வதக்கி வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சீத்தாப்பழ இலைகளில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. சருமப்பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் பளபளப்பினை உருவாக்குகிறது.



சீத்தாப்பழத்தின் மருத்துவப்பயன்கள்: சீத்தாப்பழத்தின் சில உடல் நல பயன்கள். நம் உடல் நலத்திற்கு இது எப்படி உதவுகிறது என்பதை பார்க்கலாம். கர்ப்பகால நன்மை: கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதேபோல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் மனநிலை மாற்றத்திற்கு ஒரு நல்ல தீர்வாகும். மேலும் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கின்றது. சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சீத்தாப்பழத்தில் நிறைந்துள்ளது. எனவே, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு: சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

மாரடைப்பு: மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதயக்கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகின்றது. மேலும், மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

செரிமான பிரச்சனை: நார்ச்சத்து மற்றும் தாமிரச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானக்கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் வராமல் இருக்கச் செய்கிறது. இதனால் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்: நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது: மக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. சீத்தாப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அளவு: இந்தப் பழத்தில் நியாசின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றது.

இரும்புச்சத்து:- சீத்தாப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது. ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகின்றது.

வாய் ஆரோக்கியம்: இந்தப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் வாயிலுள்ள மலினங்களை அகற்றுகின்றது. மேலும், வயிற்றுப்புண்ணை குணமாக்குகின்றது. இதனால் வாய் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கண்பார்வைத் திறன்: இந்தப்பழத்தை உட்கொள்வதால் கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கு கின்றது. மேலும் இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் கண்பார்வைத் திறனை அதிகரிக்கின்றது.

கீல்வாதம்: சீத்தாப்பழத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு வன்மை உண்டாகின்றது. ஆஸ்டீயோபோரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்கப்படுகின்றது. கீல்வாதநோய் வராமல் தடுக்கப்படுகின்றது.

தோல்புற்று நோய்: இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் நிறைந்துள்ளதால் பிரி-ரேடிகில்ஸ்களை அழிக்கின்றது. உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.

வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துகிறது: இந்தப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் குளிர்ச்சியடையும். இதனால் வெள்ளைப்படுதல் பெண்களுக்கு வராமல் தடுக்கப்படுகிறது.

குழந்தைகளின் நன்மைக்காக: சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும் பல்லும் உறுதியாகும்.

சீத்தாப்பழத்தை உண்ண கூடியவர்களுக்கு சிறுகுறிப்பு: அதிகளவில் உடல்குளிர்ச்சி மற்றும் சீதலி தன்மை உடையவர்கள் சீத்தாப்பழத்தை குறைந்தளவில் உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், சீத்தாப்பழம் மிககுளிர்ச்சி தன்மை உடையது.

Tags:    

Similar News