லைஃப்ஸ்டைல்
அன்னாசி பழம்

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த அன்னாசி பழம்

Published On 2019-12-29 04:34 GMT   |   Update On 2019-12-29 04:34 GMT
அன்னாசி பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களை கொண்டது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

ஒரு சில பழங்களையே எந்த வேளையிலும் சாப்பிட முடியும். அதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிரம்பியும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான ஒரு பழம் அன்னாசிப்பழம். பார்க்க கரடு முரடாக இருக்கலாம். தோல் சீவி இதனை நறுக்குவதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன் பின் கிடைக்கும் பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களை கொண்டது. பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்கு பலவித உடல்நல குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. இந்த பழத்தில் உள்ள குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம். அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பையை கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலியை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகை தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு அன்னாசி இலைச்சாறு வயிற்று புழு கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசிப் பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.

வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பை பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்கு தேவையான உப்பு கிடைக்கிறது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு ‘ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளக்ஸ் பொருள் ஆகும். இது உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. அதோடு உடலில் ஏதேனும் ரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை ‘ப்ரோமிலைனு'க்கு உண்டு. அன்னாசி பழத்தை தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் ‘ப்ரோமிலைன்' உள்ளது.

நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் ‘ஆன்டி ஆக்சிடன்ட்' உள்ளது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாக சாப்பிடலாம். தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். பழ ரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்டுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Tags:    

Similar News