லைஃப்ஸ்டைல்
சர்க்கரை நோய்

குடும்ப சொத்தா சர்க்கரை நோய்?

Published On 2019-11-14 07:32 GMT   |   Update On 2019-11-14 07:32 GMT
குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள், இடுப்பு அளவு அதிகமாக இருப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர்.
இன்று (நவம்பர் 14-ந் தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.

உலக அளவில் மக்கள் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதை உணர்ந்து உலக சுகாதார நிறுவனமும், ‘இன்டர்நேசனல் டயபெடிக் பெடரேசனும்’ இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நீரிழிவு தினத்தை 1991-ல் அறிவித்தது. இது 2006-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகளின் தினமாக மாறியது. இன்சுலினை கண்டுபிடித்த சர்பிரடெரிக் பாண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினமாகும்.

இந்த ஆண்டு நீரிழிவும், குடும்பமும் என்பது “மையக் கருத்தாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் இருந்தால் வாரிசுகளுக்கும் வர வாய்ப்பு அதிகம். நோயைப்பற்றி அறியாமையால் குடும்பத்தில் உள்ளவர்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடும்ப பொருளாதாரம் மருத்துவ செலவுக்கே போய்விடுகிறது. முறையாக சிகிச்சை பெறமுடியாமல் சர்க்கரை நோயின் பின்விளைவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று உணர்ந்து இந்த ஆண்டு “நீரிழிவும், குடும்பமும்” என்ற கருத்தை மையப்படுத்தியிருக்கிறார்கள்.

தற்போது உலக அளவில் 422 மில்லியன் பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ல் 642 மில்லியனாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்க்கரை நோய் என்றால் என்ன? கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் இன்சுலின் என்ற என்சைம் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் கட்டுப்படுத்தக்கூடிய செயலைச் செய்கிறது. இந்த இன்சுலின் அளவு குறைந்தாலோ அல்லது சுரக்கவில்லை என்றாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இந்த பாதிப்பைத்தான் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்கிறோம். சர்க்கரை நோய் வருவதற்கு, பலகாரணங்கள் உண்டு.குறிப்பாக குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள், இடுப்பு அளவு அதிகமாக இருப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவர்.

இன்று குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இதற்கு உடல் உழைப்பு குறைந்த எந்திரமயமான வாழ்க்கை முறை அதிக உடல் எடை, அதிக கொழுப்புள்ள துரித உணவுகளை உட்கொள்வது தொலைகாட்சி,முன்பு உட்கார்ந்து பொழுதை போக்குவதும்,கைபேசியில் தொடர்ந்து பேசுவதும் முக்கிய காரணங்கள் ஆகும்.

இதைத்தவிர ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள கர்ப்பிணி பெண்கள், கருவுற்று இருக்கும்போது தேவையில்லாத மாத்திரைகளை சாப்பிடுவது குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரகாரணமாகின்றன. சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 25 பேரில் 1 குழந்தை சர்க்கரை நோய் உள்ள குழந்தையாக பிறக் கிறது என்றும், பெண்ணின் வயது 25-க்கு மேல் இருந்தால் 100-க்கு 1 குழந்தை சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதிக தாகம், அதிக பசி, அதிகமாக சிறுநீர் பிரிதல், எடை குறைவு, உடல் பலகீனம், சிறுநீர் தாரையில் அரிப்பு, கண்பார்வை மங்குதல், ஆண்மைக்குறைவு, ஆறாத புண் போன்றவை சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை காலை வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு பரிசோதனை செய்து கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 மி.கிராமும், சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்த பின் 160-க்கு மேலிருந்தால் சர்க்கரை நோய் இருப்பதாக கூறலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடும், உடற் பயிற்சியும் அவசியம். மன அழுத்தம் குறைய யோகா, தியானம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மற்றும் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரையை முறையாக கட்டுப்படுத்தவில்லை என்றால் இதயம், கண், சிறுநீரகம், நரம்புகள் பாதிக்கப்படுவதுடன், கால்களில் உள்ள மெல்லிய ரத்தக்குழாய்கள் பாதிப்படைவதால் போதுமான ரத்த ஓட்டம் இருக்காது. மேலும், நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணர்ச்சிகளை உணரமுடியாது.இதனால், காயம் ஏற்பட்டால் நமக்கு தெரிவதும் இல்லை, எளிதில் புண் ஆறுவதும் இல்லை. மேலும் கால் சதை பலவீனத்தினால் கால் பாதங்கள் அதிக அழுத்தம் ஏற்பட்டு கால் தோல் தடித்து கரடுமுரடாக தெரியும். கால் தசைகள் வலுவிழந்து தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் கிருமிகள் வளரும் சூழல் ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளில் சராசரியாக 90 சதவீதம் பேர் காலில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 10 சதவீதத்தினருக்கு தொற்று வேகமாக பரவுகிறது. 4 சதவீதத்தினருக்கு காலையே அகற்றும் நிலை ஏற்படுகிறது.

காலை பாதுகாக்கும் முறை: பாதங்களில் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படாதவாறு எப்போதும் காலணி அணிந்து செல்ல வேண்டும். பாதங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். காலுக்கு பொருத்தமான காலணிகளை அணிவது அவசியம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உணவு, மருந்து போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. காயம் ஏற்பட்டிருந்தால் சுய மருத்துவம் தவிர்த்து உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

உணவு கட்டுபாடு, முறையான உடற்பயிற்சி, தியானம், மருத்துவர்கள் கூறிய மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை தவறாமல் கண் பரிசோதனை, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பரிசோதனை, இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.மேலும்முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் புரோதம் வெளியாகிறதா என்றும், ரத்ததில் யூரியா, கிரியாடனின் பரிசோதனை செய்து சிறுநீரக செயல்பாட்டை அறிய வேண்டும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது சர்க்கரை நோய்.

நீரிழிவு நோய் உள்ள குடும்பத்தார் அனைவரும் அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் ஆரம்பத்திலேயே சர்க்கரை நோயை கண்டுபிடித்து உரிய சிகிச்சை பெறமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோயினால் இருதயமும், மற்றொருவருக்கு சிறுநீரகமும், மற்றொருவருக்கு கண்பாதிப்பு என்ற நிலையிருந்தால் குடும்பசூழ்நிலை எவ்வாறு இருக்கும் என்று நினைத்து தான் இந்த ஆண்டு நீரிழிவும், குடும்பமும் என்ற கருத்தை அறிவித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன் மொழிந்துள்ளார்கள். சர்க்கரை நோயில் அக்கறைக்காட்டி மகிழ்ச்சியாக வாழலாம்.

டாக்டர் நா.மோகன்தாஸ், முன்னாள் தலைவர், இந்திய மருத்துவ கழகம், தமிழ்நாடு கிளை.
Tags:    

Similar News