லைஃப்ஸ்டைல்
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்...

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்...

Published On 2019-10-29 07:31 GMT   |   Update On 2019-10-29 07:31 GMT
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, பேதியுடன் அறிகுறிகள் தொடங்கும். பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய்தாக்கம், பின்னர் அதிபயங்கர நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கும்.

நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும். நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும். இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.

நோய் அபாயகரமான கட்டத்திற்கு செல்லும் போது ரத்த நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும், வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் ரத்தத்தில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும் குறைவுபடும். இதனால் இந்தக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக ரத்தப்போக்குகளும் குறிப்பாக குடல் பகுதிகளில் ஏற்படும். நோயிலிருந்து மீழும் கட்டத்தில் ரத்த நாளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இந்த நிகழ்வுகள் 2 முதல் 3 நாட்களுக்கு நடைபெறலாம். இந்நிகழ்வு பயங்கர உறுத்துதல்களையும, இதயத் துடிப்பை குறைக்கவும் செய்யும்.

சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல். இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும். இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.

டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும். இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து, தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.

இந்த செல்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும். இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும், உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சியெடுக்கும். இதனால், எலும்பு மஜ்ஜைகளும், கல்லீரலும் பாதிப்படையும். இதனால், ரத்தத்தை உறையவைக்கும் தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். விளைவுரத்த நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும்.

பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது. பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில் 8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.

இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய, உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ் புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல் வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

முனைவர் எஸ்.பிரகாஷ்,

நுண்ணுயிரியல்துறை,

தனியார்கல்லூரி, சேலம்.
Tags:    

Similar News