லைஃப்ஸ்டைல்
செம்பு பாத்திரம்

பாத்திரங்களில் இருக்கு ஆரோக்கியம்

Published On 2019-10-15 07:36 GMT   |   Update On 2019-10-15 07:36 GMT
நாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை.
நாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

செம்பு பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அணுக்கள் சீராக இயங்கத் தொடங்கி, ரத்த சோகை பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். செம்பில் உள்ள ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டு வலியை குணப்படுத்தும். எனவே, மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து 4 மணி நேரம் கழித்து பருகலாம்.

செம்பு பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் செல் உருவாக்கம் அதிகரிக்கும். மேலும், தைராய்டு சுரப்பைச் சீராக்கும். உடலின் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு டாட்டா சொல்லலாம். செம்பு பாத்திரத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் தன்மை கொண்டது என்பதால் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் வைக்கும்.

உடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். செம்பு எளிதில் பாசி பிடிக்கும் தன்மை உடையது. சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாத்திரத்தின் நிறம் மாறுவதோடு அதன் தன்மையும் மாறிவிடும். அதனால் செம்பு பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் அதை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும்.

தண்ணீர் வைக்க பயன்படுத்தினால் 2 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துவதைவிட எலுமிச்சை பழத் தோல் அல்லது புளி பயன்படுத்துவது நல்லது.



மண் பாத்திரங்கள் உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றில் சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது. மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும்போது அதன் துகள்களில் நீர் தேங்கி, சமைக்கும்போது அது ஆவியாகி வெளியேறுமே தவிர, உணவில் உள்ள சத்துகள் ஆவியாவது தடுக்கப்படும்.

மேலும் மண்சட்டியில் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்பதால், உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவுக்கு ஈடானது என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண் சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சினை ஏற்படாது; உணவுக்குழாய்க்கும் உகந்ததாக அமையும்.

உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மண் சட்டியிலிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப்பொருளில் ஆரோக்கியத்தை சேர்க்கும். மண் சட்டியில் சமைக்கும்போது உணவுப்பொருள் சட்டியில் ஒட்டாது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருக்காது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும்.

புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்களை 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். மண் சட்டியில் உள்ள துகள்களில் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் நார் பயன்படுத்தி, சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெப்பமான மண் பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளை சமைக்கப் பயன்படுத்தலாம். சமையல் கியாஸ் மிச்சமாகும்.
Tags:    

Similar News