லைஃப்ஸ்டைல்
நாவல் பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘நாவல் பழம்’

Published On 2019-09-15 04:49 GMT   |   Update On 2019-09-15 04:49 GMT
இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவல் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையை கொண்டது.

இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. கற்பூர மணமும் கருநீல நிறமும் பழம் என்பதைப்போலவே அதன் மருத்துவ குணங்களும் தனித்தன்மை கொண்டவையே.

நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துகளான தயாமின், ரிபோஃப்லோவின், நியா சின், வைட்டமின் ஏ (அ) சி ஆகியவற்றோடு சுண்ணாம்புச்சத்து, இரும் புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு மற்றும் நீர்ச்சத்து ஆகியன மிகுதியாக உள்ளது.

நாவல் பழத்தின் இலைகளிலும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன.நாவல் இலைகள் நுண்கிருமிகளை போக்கக்கூடிய வலிமை கொண்டவை.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளில் நாவல் பழத்தின் கொட்டைகளை பெரிதும் பயன்படுத்துக்கின்றனர். நாவல் மரத்தின் பட்டையும் பல மகத்துவம் கொண்டது. பட்டையை தீநீர் இட்டு வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். மேலும் இதை புண் உள்ள இடத்தில் விட்டுக் கழுவினால் புண்கள் விரைவில் ஆறும்.

நாவல் மருத்துவ பயன்கள்

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் - சிறுநீரைப்பெருக்கும்.

நாவல்கொட்டை- சிறுநீரைக் குறைக்கும், பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

நாவல் மரப்பட்டை- ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண் இவைகளைக் குணமாக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் நீங்கும்.

நாவல் மரவேர்- வாதநோய், பால்வினை நோய்கள் குணமாகும்.



நாவல் பழம் வயிறு தொடர்பான பல கோளாறுகளைத் தீர்க்கக்கூடியது. வாயுத் தொல்லைகள், சிறுநீர்த்தேக்கம், சீத ரத்த பேதியை நிறுத்தக்கூடியது. நாவல் மரப்பட்டை மற்றும் விதைகளுக்கு பேதியை நிறுத்தும் ஆற்றல் உண்டு. எருக்கட்டு அதாவது மலச்சிக்கல், கணையம் சம்பந்தமான நோய்கள், வயிற்றில் ஏற்படும் காற்று மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றையும் குணமாக்கும் தன்மை நாவலில் எல்லா பாகங்களுக்கும் உண்டு.

நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு குறைகிறது. நாவல் இலை துவர்ப்புத் தன்மை உடையது. நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதோடு ஒரு ஏலக்காய், சிறிதளவு இலவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர அஜீரணம், வயிற்றுப்போக்கு முதலியன குணமாகும்.

நாவல்பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு, ரத்த சோகை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். நாவல் இலைக்கொழுந்து, மாவிலைக் கொழுந்து, இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து புளிப்பில்லாத தயிரில் கலந்து உள்ளுக்குக்கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்கடுப்பு மற்றும் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டு கொதிக்கவைத்து வாய்க் கொப்பளிப்பதால் வாயில் ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியவை குணமாகும். நாவல் விதை சூரணத்தோடு மாம்பருப்பு சூரணமும் சம அளவு சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர சிறுநீரைப் பெருக்கும்.

பெண்கள் மலட்டுத்தன்மை குணமாக நாவல் மரத்தின் கொழுந்து இலையை கசாயமிட்டு 60 மிலி கசாயத்துடன் 1 டீஸ்பூன் தேன்சேர்த்து அருந்திவர மலட்டுபுழு குணமாகும். நாவல் வேர் ஊறிய நீரானது கழிச்சல் நீரிழிவை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.

நாவல் பழத்தின் நன்மைகள்

நாவல் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் ஏ, சி உள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்கும். எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவைக் கொடுக்கும்.  சுண்ணாம் புச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவைக் கொடுக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படுவதால் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும். நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறு களைச் சரி செய்யும்.

பெண் மலட்டுத்தன்மை குணமாகும். பெண்களுக்குத் தேவையான அளவு வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் பெண் மலட்டுத் தன்மையை குணமாக்கும். சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கி செய்கை மற்றும் நீர்சத்து நிறைந்துள்ளதால் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

பெரும்பாடு குணமாகும். நாவல் கொட்டை துவர்ப்பு சுவை உடையதால் பெரும்பாடு குணமாகும். வெண்புள்ளிகள் குணமாகின்றது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் வெண்புள்ளியை குணமாக்கும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் அழற்சி சரிச்செய்கிறது. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கல்லீரல், மண்ணீரல் மற்றும் கணையம் சார்ந்த உறுப்புகள் நோய் அணுகாமல் தடுக்கப்படுகிறது.

நாவல் பழம் சாப்பிடும் முறை

நாவல் பழத்துடன் சிறிதளவு உப்புச்சேர்த்து சாப்பிடுவது நல்லது. தினம் 20 பழம் சாப்பிடுவது நல்லது. நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாவல் பழத்தினாலுண்டாகும் தீங்கை முறிக்க, நெல்லிக்காயை மென்று தின்று குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும்.
Tags:    

Similar News