லைஃப்ஸ்டைல்
அறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...

அறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...

Published On 2019-09-13 07:34 GMT   |   Update On 2019-09-13 07:34 GMT
எப்போது மருத்துவமனைக்கு சென்றாலும், எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், டாக்டர்களிடம் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு சிகிச்சை எடுப்பதுதான் சிறந்தது.
டாக்டர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு இந்தியாவை பொறுத்தவரை மிகக்குறைவு. பெரும்பாலான இடங்களில் டாக்டர்களும் மக்களும் சகஜமாக பழகுவது இல்லை.

டாக்டர்களை பார்த்து பயப்படுவதும், தெய்வமாக பார்ப்பதும்தான் காலங்காலமாக இங்கு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இன்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றி, டாக்டர்களும் விரிவாகப் பேசுவது கிடையாது. இதனால், மருத்துவம் பற்றிய புரிதலே மக்களுக்கு இருப்பது இல்லை.

எப்போது மருத்துவமனைக்கு சென்றாலும், எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், டாக்டர்களிடம் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு சிகிச்சை எடுப்பதுதான் சிறந்தது. கைராசியான டாக்டர், நன்றாக அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் என்பதற்காக அரைகுறையாக கேட்டுவிட்டோ, எதுவுமே கேட்காமலோ அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொள்ள வேண்டாம். அறுவை சிகிச்சைக்கு முன்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை சில கேள்விகளில் அடக்கிவிடலாம்.

ஏன் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்? எப்படி அறுவை சிகிச்சை செய்யப்படும்? நாளுக்கு நாள் தொழில்நுட்பம் முன்னேறி வரும் சூழ்நிலையில், அறுவை சிகிச்சை முறையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இவற்றில், டாக்டர் எந்த முறையில் அறுவை சிகிச்சையை செய்யப்போகிறார் எனக் கேட்டு தெளிவு பெற வேண்டும்.

மாற்று அறுவை சிகிச்சை இருக்கிறதா? இந்தியாவில், மருத்துவ சிகிச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது. அலோபதி, ஓமியோபதி. நேச்சுரோபதி, சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள், மாற்று மருத்துவத்தில் குறிப்பிட்ட நோய்க்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா, அது தற்போதைய உடலின் சூழ் நிலைக்கு சரியாக இருக்குமா என கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

அறுவை சிகிச்சை செய்வதால், உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், அதற்குப்பின் மீண்டும் தொல்லை ஏதாவது வருமா, முழுமையாக பிரச்சினையில் இருந்து மீண்டுவிட முடியுமா, என்னென்ன பக்கவிளைவுகள் வரும், அவற்றை எப்படி கையாளுவது, அறுவை சிகிச்சை நிரந்தர தீர்வு தருமா, தற்காலிகத் தீர்வுதானா என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும்போது, அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து கொடுக்கப்படும். எனவே என்ன விதமான அனஸ்தீசியா தரப்போகிறீர்கள்?

அதன் தீவிரம் பற்றியும் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்னர், என்ன மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நடைமுறைகள் என்னென்ன? அறுவை சிகிச்சைக்கான வசதிகள் மருத்துவமனையில் எப்படி இருக்கின்றன? அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும், இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா? உள்ளிட்டவற்றையும் கேட்டு தெளிவு பெறுங்கள். 
Tags:    

Similar News