search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம்.

    கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது…. உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8 டிகிரி முதல் 99 டிகிரி இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையான வழிகளில் எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

     ஒருவருக்கு உடல் சூடு அதிகம் இருப்பதால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. மூலம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடலில் சூடு அதிகரித்தாலும் பிரச்சனை தான். குறைந்தாலும் பிரச்சனை தான். எப்பொழுதும் சமமான அளவில் உடல் வெப்பநிலை இருக்க வேண்டும். உடல் சூட்டை குறைக்க டிப்ஸ் இதோ உங்களுக்காக…

    உடல் சூடு ஓரளவுக்கு மேல் அதிகரிப்பதால் முடி உதிருதல், சரும பிரச்சனைகள், உள் மூலம், வெளி மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் வாகன ஓட்டுனர்கள், உட்கார்ந்து பணிபுரிபவர்கள், அதிக நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் ஆகியவர்களுக்கே உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன.

     உடல் சூட்டை எப்படி தடுப்பது?

    தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி அதில் வெந்தயத்தை 20 நிமிடம் ஊற வைத்து அதனை உலர்த்தி நன்கு காய்ந்ததும் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

    மேலும் கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு சேர்த்து இறக்கி ஆறியதும் அந்த எண்ணெய்யை கட்டை விரலில் வைக்கவும். 2 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து மன அழுத்தமும் ஏற்படாமல் இருக்கும்.

    இரவில் தூங்கும் முன் தொப்புளில் நல்லெண்ணெய்யை விட்டு தூங்க வேண்டும்.

    தினமும் காலையில் பால் குடித்து வரலாம். சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் நீச்சதண்ணீர் குடித்தால் உடல் சூடு குறையும். வெள்ளரிக்காய், தர்பூசணி, போன்றவற்றை சாப்பிட்டாலும் சூடு குறையும்.

    நீர்மோர், பழைய சாதம், கஞ்சி போன்றவற்றை குடித்தாலும் குடித்தால் உடல் சூடு குறையும்.

    அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

    தர்பூசணி பழம் சுமார் 91.45 சதவீதம் தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

    • உடல் எடை குறைக்க உதவும் விதைகள்.
    • உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை.

    பொதுவாக உடல் எடை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் உடல் எடை காரணமாக பெரும்பாலானோர் பல்வேறு டயட் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே. எனவே ஆரோக்கியம் தரும் இந்த மூன்று விதைகளை உணவில் சேர்க்கும் போது அது நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க உதவுகிறது.

     சியா விதைகள்

    சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது.

    இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

    இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவுகிறது. மிக முக்கியமாக இது உடல்நிலை இருக்கும் கலோரிகளை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

     ஆளி விதைகள்

    ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

    100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடும் போது இதில் இருக்கும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

     சூரியகாந்தி விதை

    சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.

    இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.

    சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    சூரியகாந்தி விதையை பயன்படுத்தி நாம் டீ அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைகளை நீக்கி குடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உடலை பிட்டாக வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
    • மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.

    பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

     வியர்க்குரு

    உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.

    எப்படி தடுப்பது...?

    * உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.

    * முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.

    * பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.

    * அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

    * மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

    * பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

    * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

    • கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
    • தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.

    வெர்டிகோ என்பது இயக்கம் அல்லது சுழலும் உணர்வு. இது பெரும்பாலும் தலைச்சுற்றல் என்று விவரிக்கப்படுகிறது. வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, பார்வை மங்கல், நடை தளர்வு போன்றவை இருக்கும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்த நோய்க்கான காரணங்கள் வருமாறு:

     1) ப்ராக்ஸிமல் பொசிஷனல் வெர்டிகோ:

    இந்த நிலையில் சுழல்வது அல்லது நகர்வது போன்ற தவறான உணர்வை ஏற்படுத்துகிறது. இது தலையின் இயக்கத்தில் ஏற்படும் விரைவான மாற்றத்தால் தூண்டப்படுகின்றன, அதாவது படுக்கையில் திரும்பும் போது, உட்காரும்போது அல்லது தலையில் அடிபடுவது இந்த வெர்டிகோவிற்கு மிகவும் பொதுவான காரணமாகும்.

    2) வெஸ்டிபுலர் நியூரைடிஸ்:

    வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படும் வைரஸ் தொற்றின் போது, தீவிரமான வெர்டிகோ நிலையை ஏற்படுத்தும்.

     3) மெனியர் நோய்:

    உள் காதில் அதிகப்படியான திரவம் நிரம்புவதால் இந்த நோய் வருகிறது. இது பல மணிநேரம் நீடிக்கும், தலைசுற்றல், காது கேளாமை, காதில் ஒலித்தல், காது இரைச்சல் போன்றவை காணப்படும்.

     4) மைக்ரேன்:

    ஒற்றைத் தலைவலி எனப்படும் இந்த பாதிப்பு உள்ள நபர்களுக்கு வெர்டிகோ அல்லது பிற வகையான தலைச்சுற்றல் சில நேரங்களில் ஏற்படும். இது சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்.

     5) மூளையில் ஏற்படும் கட்டிகள், ரத்த அழுத்தம் குறைதல், ரத்த சர்க்கரை அளவு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு போன்ற நிலைகளிலும் தலைசுற்றல் ஏற்படும். இதை வெர்டிகோ பாதிப்பில் இருந்து வேறுபடுத்த வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) துளசிச் சூரணம் ஒரு கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. ஆகியவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.

    3) ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மல்லி விதை, மிளகு, கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    4) தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.

    5) கிராம்பு 1, அன்னாசிப்பூ 1, இஞ்சி, எலுமிச்சை இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

    6) படுக்கையை விட்டு திடீரென எழும்பக் கூடாது.

    • தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
    • சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம்.

    வாய் துர்நாற்றம் என்பது மூச்சு விடும் போது வாயில் இருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை அல்லது உணர்வாகும். இதற்கு பெரும்பாலும் வாய் அசுத்தம் காரணமாக இருந்தாலும் சில சமயங்களில் நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் இடுக்குகளில் அதிக உணவுத் துகள்கள் தங்குதல், மோசமான வாய் சுகாதாரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நீர்ச்சத்து குறைபாட்டால் வாய் வறட்சி ஆகியவை பொதுவான காரணங்களாகும்.

    சர்க்கரை நோய், குடல் புண், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (ஈறு தொற்று, சீழ்) பல் சிதைவு, தொண்டை அழற்சி, செரிமானக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, மன அழுத்தம் ஆகியவை மருத்துவக் காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக மசாலா கலந்த உணவுகளை (பூண்டு, வெங்காயம்) உண்ணும் போது அவை வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் தொற்று மற்றும் வாய் வறட்சி ஏற்படுவதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் குளுக்கோஸ் ஆற்றலை பயன்படுத்தாமல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்த முயற்சிக்கும் போது கீட்டோன்ஸ் அதிகரிப்பதாலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாயில் பாக்டீரியா தொற்று அதிகரித்து வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகள் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்:

     தினமும் இரண்டு முறை (காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்) பல் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது, தினமும் நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று குளோர்ஹக்ஸிடின் கொப்பளிப்பான் பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    • வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன.
    • டென்ஷன் தலைவலி தான் நிறைய பேருக்கு இருக்கிறது.

    எரிச்சலடைந்த, சினமடைந்த, சேதமடைந்த, வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன. சுமார் 150-க்கும் மேலான தலைவலி வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான தலைவலிகள் ஆபத்தானதல்ல. ஆனால், சில தலைவலிகள் நமது உடலிலுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளினால் வருவதாக இருக்கலாம்.

    டென்ஷன் தலைவலி:

    இந்த வகை தலைவலி தான் அதிகமாக நிறைய பேருக்கு இருக்கிறது.

     கடுமையான ஒற்றைத் தலைவலி:

    இதைத்தான் `மைக்ரேன்' என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. தினம் தினம் புதுப்புது பிரச்சினைகளினால் உண்டாகும் தலைவலி. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்துள்ள நைட்ரேட் பொருள், மதுவகைகளில் குறிப்பாக சிவப்பு ஒயின், சிகரெட்டிலுள்ள நிகோட்டின், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் அதிக நீரிழப்பு ஏற்பட்டவர்கள், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், போதுமான நேரம் தூங்காதவர்கள், எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், டி.வி. உபயோகிப்பவர்கள், கண் பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி போடச் சொல்லியும் போடாதவர்கள், அடிக்கடி தொடர்ந்து தும்முபவர்கள், இருமுபவர்கள், இவர்களுக்கெல்லாம் தலைவலி அடிக்கடி வரலாம்.

    இதுபோக, தினமும் தூங்கும் நேரம் மாறிவிட்டால், திடீரென கடின உடற்பயிற்சி செய்தால், சரியான வேளைக்கு உணவை உண்ணாமல் விட்டுவிட்டால், தொடர்ந்து அதிக நேரம் சிரித்தால், அதிக நேரம் அழுதால், அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருந்தால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தொந்தரவால், தினமும் தலைக்கு குளித்தால், தலைக்கு குளித்தபின் தலையை சரியாக துவட்டவில்லை என்றால், மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து அதிகமாக உபயோகப்படுத்தினால், வயிறு சரியாக முழுவதும் காலியாகவில்லை என்றால், சென்ட் வாசனை, நாற்றம் முதலியவைகளை முகர்ந்தால், பிடிக்காதவர்களை பார்த்தால் கூட சிலருக்கு தலைவலி வந்துபோக வாய்ப்புண்டு.

     சிறுநீரகம், மூளை முதலியவைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி ஏற்படும். உங்களுடைய அன்றாட வேலைகளை, உங்கள் மனநிலையை தலைவலி பாதிக்கிறதா என்பதை உங்களுடைய குடும்ப டாக்டரிடம் விவரமாகச் சொல்லவும்.

    அடிக்கடி வரும் தலைவலி, தொடர்ந்து இருக்கும் தலைவலி, தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றாலும் சரி, கடின வேலையினால் தலைவலி வந்தாலும் சரி உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்க வேண்டும்.

    பிடிக்காத சென்ட், உணவு, பிற பொருட்கள் முதலியவற்றை ஒதுக்கினாலே தலைவலி தானாகவே பறந்துவிடும். தலைவலி என்பது ஒரு நோயல்ல. உடலில் மறைந்திருக்கும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே. மனதில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறியே.

    எனவே எது உடலுக்கும், மனதுக்கும் ஒத்துவரவில்லை என்பதை முடிந்தவரை நீங்களே கண்டுபிடித்து அதைத் தவிர்த்துவிடுங்கள். தலைவலி பறந்துவிடும்.

    • கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.
    • நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும்.

    தற்போதைய காலகட்டத்தில் லேப்டாப், கணிணி முன்னிலையில் உட்கார்ந்து வேலை செய்யும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் கூட நிறைய பேருக்கு முதுகுவலி, கைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

     இந்த கணினி கைவலி பிரச்சனை பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில் இது ஒரு நபரின் வாழ்க்கையை பொருத்தது. அவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறார் என்பதையெல்லாம் பொருத்து அமைகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

    இந்த கணிணி கைவலியின் முதல் அறிகுறியாக முள்ளெலும்பு உணர்வுகள் முதல் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உணர்வு இழப்பு மற்றும் உணர்வின்மை வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

     கம்பியூட்டரிலேயே உட்கார்ந்து டைப் பண்ணுவது, மவுஸ் கிளிக் செய்வது சில மணி நேரம் வேண்டும் என்றால் சவுகரியமாக தோன்றலாம். ஆனால் நேரம் ஆக ஆக கைவலிக்க ஆரம்பித்து விடும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரே மாதிரியான உடல் அசைவுகளை செய்து கொண்டே இருக்கும் போது அந்த பகுதி தசைகள் வலிக்கத் தொடங்கி விடுகின்றன.

    இந்த வலி அப்படியே அவர்களின் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வரை பரவ ஆரம்பித்து விடுகிறது. வலியால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க நீங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

     என்னசெய்யலாம்...?

    வேலை பார்க்கும் சமயங்களில் சிறிது ரிலாக்ஸ் மற்றும் கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம். தசைகள் ஓய்வெடுக்க சிறிது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம். அதே நேரத்தில் கைவலியை குறைக்க குளிர் ஒத்தடமும் கொடுக்கலாம்.

    இதைத் தவிர்த்து நீங்கள் வேலை செய்யும் இடம், மேஜை உங்களுக்கு செளகரியமாக இல்லை என்றால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள கீபோர்டு, ஹேண்ட் ரெஸ்ட், கம்ப்யூட்டர் மவுஸ், ஜாய்ஸ்டிக் போன்றவற்றை உங்க பயன்பாட்டிற்கு வசதியாக எந்த இடத்தில் சவுகரியமாக இருக்குமோ அங்கே வைத்துக் கொள்ளுங்கள்.

     மேலும் தொடர்ந்து கைகளை பயன்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள். சிறிது நேரம் கை தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள். அதே மாதிரி நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும். நீங்கள் உட்காரும் விதத்திற்கு ஏற்றவாறு சரி செய்யக்கூடிய நாற்காலியை பயன்படுத்துங்கள். நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள்.

    அதே மாதிரி உங்க கம்ப்யூட்டர் மானிட்டரும் உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்யக் கூடிய வகையில் அமைந்திருப்பது நல்லது. அப்பொழுது தான் உங்க கோணத்திற்கு ஏற்ப திருப்பிக் கொள்ள முடியும். கைகளுக்கான தன்னியக்க தசைபயிற்சி போன்றவைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தைராய்டு உணவுமுறையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

    தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்னர் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சனையால் பத்து பெண்களில் ஒரு பெண்ணாவது கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ ஆய்வின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் உள்ளது.

    இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தைராய்டு நோய் நமக்கு உள்ளது என்பது பல பெண்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு இந்த நோய் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமலேயே தாக்குதலை ஏற்படுத்தும். திருமணம் ஆகி கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் என வளர்ச்சி ரீதியாக தைராய்டு நோய் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்த தைராய்டு பிரச்சனையை சரி செய்ய பல பெண்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து மருத்துவர்களை அணுகி தினசரி மாத்திரைகளை போட்டு சலித்து போய் இருப்பார்கள்.

      தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், அது நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், அதில் தொந்தரவு ஏற்பட்டால், சோர்வு, முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, சளி போன்ற பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

    தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தான மற்றும் சமச்சீரான உணவு தைராய்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவாது, ஆனால் சரியான மருந்தை எடுத்துக் கொண்டால், அறிகுறிகளை கண்டிப்பாக குறைக்கலாம். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இதன் அறிகுறிகளைக் குறைக்க உதவும். தைராய்டில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் பானம் பற்றி தெரிந்து கொள்வோம்.

     வீட்டு வைத்தியம்

    தைராய்டு பிரச்சனையை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது. இதை நீங்கள் சரியான அணுகு முறையில் செய்து வந்தால் தைராய்டு நோய் பிரச்சனைகளில் இருந்து சில காலங்களில் விடுபடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி

    மாதுளை- 1

    கேரட்- 1

    பூசணி விதைகள்- 1 டீஸ்பூன்

    சூரியகாந்தி விதைகள்- 1 டீஸ்பூன்

    செய்முறை:

    200 மிலி தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். விதைகளைத் தவிர அதாவது கொத்தமல்லி, கேரட், மாதுளை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது விதைகளை மேலே போட்டு அரைக்க வேண்டும். தைராய்டு ஜூஸ் தயார். இதை தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் தாராளமாக தினமும் குடிக்கலாம்.

      மற்றொரு ஜூஸ்

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்- 1 கிளாஸ்

    கொத்தமல்லி விதைகள்- 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை- 8-10

    உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் தண்ணீர், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும் அல்லது வெதுவெதுப்பானதும் வடிகட்டி எடுத்து சாப்பிடலாம்.

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
    • வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் `கிளாப்பிங் தெரபி' என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

     * இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.

    * மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.

    * மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.

    * குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.

    * வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

    * குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும்.

    * உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தைகுறைப்பதற்கும் உதவும்.

    * உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.

    • மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம் தூக்கம்.
    • தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம்.

    தூக்கம் என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். அதை பற்றிய முக்கியமான சில தகவலை நாம் அறிந்து கொள்ளலாம்.

    ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இந்த குறிப்பிட்ட நேர தூக்கம் கிடைப்பதில்லை. படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதும், தூக்கத்தின் இடையில் விழிப்பதுமாக நேரம் கடந்து விடுகிறது.

    ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு இருக்கும் பணிச்சுமையால் சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களது உடலிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் ஒரு மனிதர் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால் தேவையற்ற மன உளைச்சலும், சோம்பேறித்தனமும் தான் அதிகரிக்கிறது. தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

    தூக்கத்தின் நன்மைகள்

    ஒருவர் நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்குவதன் மூலம் மன அழுத்தம், உடலில் உள்ள சோர்வு முற்றிலுமாக குறைகிறது.

    சரியாக தூங்குவதால் உடலில் சீரான ரத்த ஓட்டம், புத்துணர்ச்சி, மூளையின் செயல்படும் திறன் அதிகரித்தல் போன்றவை நமக்கு இயல்பாகவே கிடைக்கும்.

    தினமும் 8 மணி நேரம் தூங்குவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் நோயை சரி செய்யலாம் என மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    ஆரோக்கியமான தூக்கத்தால் இதய சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

    எவ்வளவு நிம்மதியாக தூங்குகிறோமோ அந்த அளவிற்கு நம் மனதில் உள்ள அழுத்தங்கள், கவலைகள் குறையும் என ஆய்வில் கூறப்படுகிறது.

    • திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
    • நியாபக மறதி டிமென்சியா, அம்னீஷியா என இரு வகைகளில் அடங்கும்.

    நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.

    நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதை கவனிக்காமல் தேடிக் கொண்டே இருப்பது, அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை செல்லும் இடங்களில் வைத்து விட்டு, வந்த பின் எங்கு வைத்தோம் என்று தேடுவது.

    முன்பு அறிமுகமான நபரைத் திடீ ரென பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாமல் சமாளிப்பது, பேனா, சாவி, கண்ணாடி, பர்ஸ் இவைகளை கைகளிலோ அல்லது அருகிலோ வைத்து விட்டு தேடுவது. ஒருவருக்கு போன் செய்வதற்கு நினைத்து விட்டு மறந்துவிடுவது இவையாவும் இந்த திடீர் நியாபக மறதியில் வந்து விடும்.

     பொதுவாக நியாபக மறதி 'டிமென்சியா' மற்றும் 'அம்னீஷியா' என இரு வகைகளில் அடங்கும். நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:

    1) பிரமி நெய் 5 மி.லி வீதம் காலை, இரவு சாப்பிடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கும்.

    2) வல்லாரை மாத்திரை 1-2 மாத்திரை காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) அமுக்கரா லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) நெல்லிக்காய் லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

    6) செம்பருத்திப் பூ, குங்குமப்பூ இவைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் மூளை, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

    7) உணவில் வைட்ட மின் பி1, பி6, பி12 சத்து, செலீனியம், துத்தநாகம் குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    8) வல்லாரை, பிரமி, துளசி இலைகள் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகள். இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி பெருகும்.

    9) வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, சிறுகீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகை பழங்கள், பூசணி விதைகள், வேர்க்கடலை இவைகளில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன.

    10) தினமும் 10-15 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும்.

    11) சீரான தூக்கம் இன்றியமையாதது, டி.வி, வீடியோ கேம்ஸ் இவைகளை தவிர்ப்பது நல்லது.

    ×