லைஃப்ஸ்டைல்
நித்தம் சுத்தம் பேணு

நித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...

Published On 2019-12-06 02:58 GMT   |   Update On 2019-12-06 02:58 GMT
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும்.
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும். நம்மில் பலருக்கு சுத்தம் சொல் அளவில் இருக்கலாம். செயலில் சுத்தத்தை கடைப்பிடிப்பது மிகச் சிரமமான காரியம்தான். ஆனால் ஒவ்வொன்றிலும் சுத்தத்தை கடைப்பிடிப்பதால் வெற்றி எளிதில் வந்து சேரும் என்பது உறுதியான உண்மை.

சிறுவயதிலிருந்து சுத்தத்தை ஒரு பழக்கமாக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைப்போல உங்களில் எத்தனைபேர் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்கிவிட்டு தூங்கச் செல்கிறீர்கள்? இதுபோல பல விஷயங்களில் சிறுவர்களான நீங்கள் சுத்தத்தை வழக்கமாக்க வேண்டி இருக்கிறது. அது பற்றி என் அனுபவங்களை கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ளட்டுமா குழந்தைகளே... தினமும் பற்களை சுத்தம் செய்யுங்கள். அதுபோல வாரம் ஒருமுறை நகங்கள் வெட்டுங்கள். மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டிக் கொள்ளுங்கள். பள்ளி, வகுப்பறை, வீட்டில் படிக்கும் அறை ஆகியவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, தேவையில்லாத குப்பைகளை அப்புறப்படுத்தி, பயனுள்ளவற்றை மீண்டும் அதே இடத்தில் ஒழுங்காக வைக்கும் சுத்த வழக்கத்தை கடைப்பிடியுங்கள்.

சிலர் பேசும்போது, அவருக்கு வாய் சுத்தமில்லை, கை சுத்தமில்லை என்று பேசுவதை கேட்டிருக் கிறீர்களா? வாய் சுத்தமில்லை என்றால் அவர் பல் துலக்குவதில்லை என்று அர்த்தமல்ல, பொய் பேசுகின்றார் என்று பொருள். அதுபோல கைசுத்தமில்லை யென்றால் அவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதில்லை என்பதல்ல, அவர் பணம் கொடுக்கல், வாங்கலில் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பது பொருள்.

சிறுவர்களான நீங்களும், இளம் வயதிலிருந்தே வாய்சுத்தம், கைசுத்தத்தை பேண வேண்டும். ஆம், வாக்கு கொடுத்தால் தவறக்கூடாது, வாய் திறந்தால் பொய் பேசக்கூடாது. அதுவே வாய் சுத்தமாகும்.

அதுபோலவே மற்றவர் பொருளை கேட்காமல் எடுக்கக்கூடாது. கேட்டு வாங்கிய பொருளாக இருந்தால் திரும்ப அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தெரியாமல் எடுத்தால் திருட்டாகும், திரும்ப கொடுக்காமல் வைத்துக் கொண்டால் நீங்கள் ஏமாற்று பேர்வழி என்று பெயர்பெறுவீர்கள்.

அந்தக் களங்கம் உங்களுக்குத் தேவையில்லையே குட்டீஸ். அதனால் நீங்கள் சுத்தமானவர் என்ற பெயர் பெற்றால் பின்னாளில் நீங்கள் எந்த களங்கத்திற்கும் ஆளாக மாட்டீர்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

கைசுத்தம், வாய் சுத்தம் போலவே செயல்சுத்தம் எல்லோருக்கும் மிகமிக முக்கியமாகும். செயல் சுத்தம்தான் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியதாகும். அதுதான் நீங்கள் எத்தகையவர் என்பதை மற்றவர்களுக்கு காட்டும், நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதை தீர்மானிக்கும்.



ஒருமுறை காமராசர் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதற்காக எல்லா மாணவர்களிடமும் ஒரு அணா வசூலித்தனர்.

பூஜை முடிந்த பின்னர் ஆசிரியர் ஒருவர் அனைத்து மாணவர்களுக்கும் பொரி, கடலை, தேங்காய் வழங்கினார். மாணவர்களோ வரிசையில் செல்லாமல் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சென்றனர். கடைசியில் நின்றிருந்த காமராசருக்கு சிறிதளவு பிரசாதமே கிடைத்தது.

வீட்டிற்கு அதை கொண்டு சென்ற காமராசரிடம், அவரது பாட்டி, “எல்லா பிள்ளைகளுக்கும் அதிகமாக பிரசாதம் கிடைத்திருக்க, உனக்கு மட்டும் ஏன் கொஞ்சமாக கிடைத்திருக்கிறது, நீயும் அவர்களைப்போன்று ஒரு அணாதானே கொடுத்தாய்?” என்று கேட்டார்.

“ஆமாம், வரிசை ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்கள்” என்று காமராசர் வருந்தினார். அந்த நிகழ்வு அவரை பொதுவாழ்வில், எல்லோருக்கும் பொதுவாக கொடுக்கப்பட வேண்டியவை எல்லாம் அனைவருக்கும் சம அளவு கிடைப்பதை உறுதி செய்ய வைத்ததாம். அதுதான் பின்னாளில் அவர் அரசு பொறுப்பிற்கு வந்தபின்பு எல்லோருக்கும் சமமாக உரிமை வழங்கவும், நல்லாட்சி செய்யவும் உள்ளுணர்வை கொடுத்ததாக நினைவுபடுத்துகிறார்.

வரிசை நிலை சரியானால் வாழ்க்கை நிலையும் சரியாகும். இதை சிறுவயதிலேயே உணர்ந்தால் சிறப்பாக வாழலாம். தங்கள் செயல்களை சுத்தப்படுத்தி, வரிசைப்படுத்தி வெற்றியைத் தேட வேண்டும்.

செய்யும் செயல்களில் கடினமான முயற்சியிருந்தும் அதில் சுத்தமில்லையென்றால் அந்த முயற்சியினால் நல்ல பலன்கள் நிச்சயமாக கிடைக்காது. முயற்சியிருந்தும் முன்னேற முடியாத சூழல் உருவாகும்.

தரையில் அழுக்கு படிந்தால் அம்மா, துடைப்பம் கொண்டு துடைத்து சுத்தம் செய்வதை பார்த்திருப்பீர்கள், சிறுவர்களான நீங்கள் மனிதில் பதிந்திருக்கும் தீய பழக்கங்கள் எனும் அழுக்குகளை சொந்த முயற்சியால் துடைத்து எடுத்தால்தான் சுத்தமான செயல்கள் வெளிப்படும். வெற்றி வசப்படும்.

செயல்களை சுத்தமாக்க உணர்ச்சிக் கட்டுப்பாடு அவசியம். ஆசைகள், கோபங்கள் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தினால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சரியான ஆசைகளுக்கும், நியாயமான கோபங்களுக்கும் மட்டும் இடம் கொடுங்கள். அளவற்ற ஆசைகளையும், தீவிர கோபங்களையும் கட்டுப்படுத்துங்கள். சுத்தமாக்குங்கள். பின்னர் நீங்கள் நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும். வெற்றி கிடைக்கும்.

-நல்லசிவம், குன்றத்தூர்.
Tags:    

Similar News