வழிபாடு

மூவர்கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

Published On 2022-07-04 06:51 GMT   |   Update On 2022-07-04 06:51 GMT
  • மூவர்கண்டியம்மன் கோவில் சிதிலமடைந்து வருகிறது.
  • இந்த கோவில் நூற்றாண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீபகம்பம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயிலில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது.

சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர்கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது.

மண்டபத்தின் மீது அமைந்துள்ள கோபுரத்தின் மீது வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் இயற்கை சீற்றங்களாலும், போதிய பராமரிப்பின்றியும் சிதைந்து காணப்படுகிறது. சோமவாரப்பட்டியில் புகழ்பெற்ற மூவர்கண்டியம்மன் கோவிலை சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தும் இதுவரை எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் கோவில் சிதிலமடைந்து வருகிறது.

கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ள நிலையில் காலம் தாழ்த்துவதால் கோவில் சிதிலமடைந்து வருகிறது.பொதுமக்கள் தங்களது பங்களிப்போடு கோவிலை சுற்றி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவில் நூற்றாண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. மூவர்கண்டியம்மன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News