உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா 22-ந் தேதி தொடக்கம்
- சதுர்த்தி விழா 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது.
- 31-ந்தேதி தீர்த்தவாரி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 29-ந்தேதி விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜை செய்து வழிபாடு நடத்திய சிறப்பு பெற்ற கோவிலாகும். அதுபோல ஆண்டுதோறும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான 22-ந் தேதி காலை 9 மணிக்கு கோவிலின் முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
அன்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் 8-வது நாளான 29-ந்தேதி விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக அலுவலக பொறுப்பாளர் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.