வழிபாடு

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா

Published On 2022-10-06 08:04 GMT   |   Update On 2022-10-06 08:04 GMT
  • அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை டவுன்ஹால் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை காயம் பட்ட இடத்தில் வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்றனர்.

பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்த உடன் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

Tags:    

Similar News